மின்சிகரெட்டுகள் மற்றும் அது சார்ந்த பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற தென்கொரிய ஆடவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
27 வயதான அந்த ஆடவர் மார்ச் 27ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் கடத்தல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
இரண்டாம் முனையத்தில் ஆடவர் பையைச் சோதித்த அதிகாரிகள் அதிலிருந்து 2,000 ஹீட் ஸ்டிக்சைக் கைப்பற்றினர். ஹீட் ஸ்டிக் சாதனங்கள் புகையிலையை எரிக்காமல் சூடாக்கும் திறன் கொண்டவை.
“மார்ச் 24க்கும் 27க்கும் இடையில் சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் 42 பயணிகளிடம் மின்சிகரெட்டுகள் இருந்தன. 240க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் சிக்கின,” என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
மின்சிகரெட்டுகள் வைத்திருந்தவர்களில் 48 விழுக்காட்டினர் சிங்கப்பூர் வாசிகள். 52 விழுக்காட்டினர் குறுகிய கால விசாவில் சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
குறுகியகால விசாவில் சிங்கப்பூருக்கு வந்தவர்கள் ஒரு முறைக்கு மேல் மின்சிகரெட் சார்ந்த குற்றம் செய்தால் அவர்கள் நாட்டிற்குள் வரத் தடை விதிக்கப்படும்.
நீண்டகால விசாவில் சிங்கப்பூரில் உள்ளவர்கள் மூன்றுமுறைக்கு மேல் மின்சிகரெட் சார்ந்த குற்றம் செய்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள், மேலும் சிங்கப்பூருக்குள் வரத் தடை விதிக்கப்படும்.

