‘அரோவானா’ மீன்களை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை கோரும் வழக்கறிஞர்

‘அரோவானா’ மீன்களை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை கோரும் வழக்கறிஞர்

1 mins read
830e559c-3059-41ef-9830-ac2327525952
மலேசியாவைச் சேர்ந்த 27 வயது லிம் சாங் பூன், ஜூன் மாதம் 25ஆம் தேதி, 14 அரோவானா மீன்களை மலேசியப் பதிவு எண் கொண்ட வாகனத்தின் மூலம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு எடுத்து வந்தார். - படம்: பிக்சாபே

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 14 ‘அரோவானா’ மீன்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள்.

மலேசியாவைச் சேர்ந்த 27 வயது லிம் சாங் பூன், ஜூன் மாதம் 25ஆம் தேதி, 14 அரோவானா மீன்களை மலேசியப் பதிவு எண் கொண்ட வாகனத்தின் மூலம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு எடுத்து வந்துள்ளார்.

இரவு 8.15 மணி வாக்கில் லிம் சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் சிக்கினார்.

லிம்முடன் 25 வயது இந்தோனீசியப் பெண் கெல்லியும் இருந்தார். விசாரணையில் லிம் ஓட்டி வந்த வாகனம் கெல்லிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெல்லிக்கு ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் லிம்மிற்கு மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

சந்தேக நபர்கள் இருவரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தகுந்த உரிமம் இல்லாமல் சில விலங்குகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்