ஆகஸ்ட் மாத முற்பாதியில் வறண்ட வானிலை

ஆகஸ்ட் மாத முற்பாதியில் வறண்ட வானிலை

1 mins read
b47658bc-d21a-4e84-8e94-ba5986964f89
ஜூலை மாத இறுதியில் அதிக மழை பெய்தாலும் ஆகஸ்ட் மாதம் சற்று வறட்சியாகத் தொடங்கும். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்
Google News Preferred Icon

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் பல நாள்களில் அவ்வப்போது அதிகக் காற்று வீசும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அதன் இருவாரத்துக்கான கணிப்புகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.

சில நாள்களில் தீவின் சில வட்டாரங்களில் குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை முற்பகலிலும் மதிய வேளைகளிலும் பெய்யும் எனவும் அது கூறியது.

ஆகஸ்ட் மாதத்துக்கான முதல் இரு வாரங்களின் மொத்த மழையின் அளவு வழக்கத்தைவிட குறைவாகவே பல இடங்களில் பெய்யும் எனவும் மையம் குறிப்பிட்டுள்ளது.

அன்றாட வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அது தெரிவித்தது. இரவு நேரங்கள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் பல நாள்களுக்கு 27 டிகிரி செல்சியஸ் அளவுக்குமேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இரண்டாம் பாதியில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாகப் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, ஜூலை 22ஆம் தேதி ஜூரோங் பியர் பகுதியில் பதிவான 105.8 மில்லிமீட்டர் மழை, ஜூலை பிற்பாதியின் அதிகபட்ச அன்றாட மழைப் பதிவு என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்