பணமோசடி வழக்கு: குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் மீது ஆறு புதிய குற்றச்சாட்டுகள்

பணமோசடி வழக்கு: குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் மீது ஆறு புதிய குற்றச்சாட்டுகள்

2 mins read
fd185ad1-8e18-465c-8f24-18ed0182d219
கம்போடியாவைச் சேர்ந்த சென் சிங்யுவென் இப்போது மொத்தம் பத்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். - படம்: செல் குலாப்பா/ சிங்கப்பூர் காவல்துறை

மிகப் பெரிய பணமோசடி வழக்கில் சிக்கியிருக்கும் பத்து பேரில் ஒருவரான கம்போடியாவைச் சேர்ந்த சென் சிங்யுவென்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கையில், $3 பில்லியன் பெறுமான ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.

33 வயதான அவர் பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானார். பொய் ஆவணங்கள் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள், ஏமாற்றுச் செயலுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள், பொய்யான மின்பதிவுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் ஆகியவை அவர்மீது சுமத்தப்பட்டன.

இப்போது அவர் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சென், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தடுப்புக்காவலில் இருக்கிறார்.

போலி ஆவணங்கள் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் மோசடியில் ஈடுபடும் நோக்கில் இரண்டு பொய்யான வருமானச் சான்றிதழ்களைத் தயாரிக்கும்படி, யின் ஹாங் லியூ ஷுயி டியென் ஹுவா என்ற ஆடவரை சென் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

பொய்யான மின்பதிவு தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ வங்கியிடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க, வாங் சியுஜியௌ என்ற நபருடன் சென் திட்டமிட்டு செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தப் பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில் வாங்கும் ஒருவர் என்று சட்ட அமைச்சு முன்னதாக தெரிவித்தது.

ஏமாற்றுக் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, சென் சம்பந்தப்பட்டிருந்ததை நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.

சென் பிப்ரவரி 21ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாக வேண்டும்.

குறிப்புச் சொற்கள்