கேன்பெரா வட்டாரத்தில் 19 வயது ஆடவரைக் கடத்தியதாக மஷஹாரி மஸ்லான் எனும் ஆடவர்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 5) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மஷஹாரியிடம் 43 சென்டிமீட்டர் நீளம்கொண்ட பாராங் கத்தி இருந்ததாகவும் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
38 வயது மஷஹாரி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை 1.55 மணிக்கு கேன்பெரா ஸ்திரீட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 104Bல் கடத்தலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தலில் ஈடுபட்டது, தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாராங் கத்தியை வைத்திருந்த ஒரு 38 வயது ஆடவர், பாதிக்கப்பட்ட ஆடவரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு, அந்த 38 வயது ஆடவர் பாதிக்கப்பட்ட ஆடவரை வேறு இடத்துக்கு ஓட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த நால்வரில் ஒருவரான 36 வயது ஆடவர் ஒருவர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட ஆடவரின் அந்தக் கார் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 - அவென்யூ 10 சந்திப்பில் விளக்குக் கம்பத்தின்மீது மோதியது.
மேல் விசாரணைக்குப் பிறகு அந்த 36 வயது ஆடவருடன் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அப்பெண்களில் ஒருவருக்கு வயது 30, மற்றொருவருக்கு 38 வயது என்று காவல்துறை முன்னதாகக் கூறியது.
மற்ற மூவர் தொடர்பான விசாரணை தொடர்வதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.


