ஐஜூஸ் பழச்சாறு இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழலை நக்கியதைத் தானே காணொளியில் பதிவிட்ட பதின்ம வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 30) $600 அபராதம் விதிக்கப்பட்டது.
டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன் என்ற 19 வயது ஆடவர், பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு முன்பு, தாம்சன் ரோட்டில் உள்ள கோல்ட்ஹில் சென்டரில் குத்துச்சண்டை வகுப்பில் மெக்ஸ்மிலன் கலந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு அவர் பானம் வாங்குவதற்காக அந்த ஐஜூஸ் விநியோக இயந்திரத்துக்குச் சென்றார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பிறகு இயந்திரத்திலிருந்த உறிஞ்சுகுழல்களில் ஒன்றை எடுத்து அதில் பாதியை நக்கிவிட்டு மறுபடியும் எடுத்த இடத்திலேயே வைத்திருக்கிறார்.
இன்ஸ்டகிராமில் பதிவேற்றம்
மெக்ஸ்மிலன் அச்செயலை இன்ஸ்டகிராம் கதையாகப் பதிவிட்டார். அவ்விடத்திலிருந்து புறப்பட்ட பிறகு காணொளியைத் தொகுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
அச்சம்பவத்துக்குப் பிறகு ஐஜூஸ், அந்த இயந்திரத்தில் இருந்த எல்லா 500 உறிஞ்சுகுழல்களையும் மாற்றவேண்டியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.


