தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (TPE) பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
சிலேத்தார் விரைவுச்சாலையை (SLE) நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில், பிற்பகல் 1.20 மணியளவில் இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் மற்றும் இரண்டு டாக்சிகள் விபத்தில் சிக்கியதாகத் தங்களுக்குத் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவருக்குச் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
விபத்து தொடர்பாக 59 வயது டாக்சி ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விரைவுச்சாலையின் ஒரு பகுதியை அதிகாரிகள் மூடியிருந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் வாகனங்கள், அவசர உதவி வாகனம் மற்றும் விரைவுச்சாலை கண்காணிப்பு வாகனம் ஆகியவை காணப்பட்டன.
காணொளியில் ஒரு லாரி கவிழ்ந்து கிடந்தது. அதற்குப் பின்னால் ஒரு டாக்சியும் ஒரு காரும் நின்றிருந்தன. வாகனத்தின் பாகங்களும் சிதறிக் கிடந்ததைக் காணமுடிந்தது.

