சட்டவிரோதமாகப் பிறரின் முகவரிகளை மாற்றியது தொடர்பான வழக்கு: மூவர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாகப் பிறரின் முகவரிகளை மாற்றியது தொடர்பான வழக்கு: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
4fb46b4f-6db5-437a-8b5d-125fd3bf5e6e
69 பேரின் அடையாள அட்டை, சிங்பாஸ் விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களது முகவரிகளை மோசடிக்காரர்கள் இணையம் மூலம் மாற்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையச் சேவை மூலம் சட்டவிரோதமாகப் பிறரின் முகவரிகளை மாற்றிய குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் மீது வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) குற்றம் சுமத்தப்பட்டது.

26 வயது கோ ஹோங் யான், 30 வயது இங் வெய் சாங், 38 வயது யுவேன் மன் ஃபெய் ஆகிய மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையச் சேவையில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளைப் பெறும் நோக்கில் ஆறு எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெற இங் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

இது 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

அடையாள அட்டைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிகளைச் சட்டவிரோதமாக மாற்ற அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கோவின் தனிப்பட்ட விவரங்களை யுவேன் பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.

பயனர் அடையாம், மறைச்சொல் ஆகியவற்றை யுவேன் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதின்று தமது சிங்பாஸ் கணக்கிற்கான ஒருமுறை மறைச்சொல்லை யுவேனிடம் கோ தந்ததாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையச் சேவை மூலம் பலருக்குத் தெரியாமல் அவர்களது முகவரிகளை மாற்ற அனுமதி வழங்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்த மூவர் சம்பந்தப்பட்ட வழக்கு ஜனவரி 24ஆம் தேதியன்று மீண்டும் விசாரிக்கப்படும்.

69 பேரின் அடையாள அட்டை, சிங்பாஸ் விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களது முகவரிகளை மோசடிக்காரர்கள் இணையம் மூலம் மாற்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையச் சேவை மூலம் முகவரிகளை மாற்றும் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்