சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள்போல நடித்தவர்களிடம் $2.6 மில்லியன் இழப்பு

சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள்போல நடித்தவர்களிடம் $2.6 மில்லியன் இழப்பு

1 mins read
d90f6a2c-904c-42e2-ad33-996c7ddb7d30
இணைய மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்ட புளோக் 501 பீஷான் ஸ்திரீட் 11ல் காவல்துறையின் பதாகை வைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் நாணய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள்போல நடித்த மோசடிக்காரர்களிடம் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து குறைந்தது $2.6 மில்லியன் இழக்கப்பட்டது.

இந்த அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்ட மோசடிக்கு குறைந்தது 41 பேர் இலக்கானதாக காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

வங்கி அதிகாரிகள்போல நடித்த மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்தனர். ஆனால், அந்தப் பரிவர்த்தனைகள் உண்மையில் நடைபெறவில்லை.

தாங்கள் அந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ சம்பந்தப்பட்ட வங்கி அட்டைகளை வைத்திருக்கவோ இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியபோது, சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிபோல நடித்த வேறோரு நபரிடம் உரையாடலை மோசடிக்காரர்கள் மாற்றிவிட்டனர்.

பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக பாதிக்கப்பட்டவர்களை ‘அதிகாரிகள்’ குற்றஞ்சாட்டினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்த, ‘காவல்துறை அதிகாரி’ எனும் மற்றொரு மோசடிக்காரரிடம் விவகாரம் ஒப்படைக்கப்பட்டது.

‘அதிகாரி’களால் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் மோசடிக்காரர்கள் கூறினர். அல்லது விசாரணைக்காக எனக் கூறி வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் கோருகின்றனர்.

மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாமல்போன பிறகு, அல்லது வங்கிகள் அல்லது காவல்துறையிடம் விசாரித்த பிறகே தாங்கள் மோசடிக்கு ஆளானதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்
மோசடிபணம்இழப்புகாவல்துறை