இயோ’ஸ் நிறுவனத்தில் 25 பேர் ஆட்குறைப்பு

இயோ’ஸ் நிறுவனத்தில் 25 பேர் ஆட்குறைப்பு

1 mins read
d38de0c8-6f72-4f7a-bdce-bbba5edbcbcb
மலேசியாவுக்கு இடம் மாறினாலும் தற்போதைய செனோகா ஆலை சிறிய அளவிலான உற்பத்தியில் ஈடுபடும் என்று இயோ ஹியாப் செங் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பானத் தயாரிப்பு நிறுவனமான இயோ ஹியாப் செங் (Yeo’s), தனது ஊழியரணியில் 25 பேரை ஆட்குறைப்புச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

தனது பானக் கலன் (கேன்) உற்பத்திப் பணிகளை மலேசியாவில் ஒருங்கிணைக்கும் பொருட்டு, செனோகோவில் இயங்கிவரும் ஆலையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக அந்நிறுவனம் கூறியது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தாக்கல் செய்த ஓர் அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவின் ஜோகூரிலும் சிலாங்கூரிலும் செயல்பட்டுவரும் தனது ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அவற்றின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை உதவும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

அதேவேளை, தற்போதைய செனோகா ஆலை, தனது குழுமத்தின் தலைமையகமாகவும் சிறிய அளவிலான உற்பத்தி மையமாகவும் தொடர்ந்து செயல்படும் என்றும் யோ ஹியாப் செங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

‘டைகர் பியர்’ மதுபானத்தைத் தயார்செய்யும் ஏ‌ஷியா பசிபிக் புரூவரிஸ் சிங்கப்பூர் (ஏபிபிஎஸ்) நிறுவனம் அடுத்த ஈராண்டுகளில் சுமார் 130 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் இயோ நிறுவனம் தனது ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

வேலை இழக்கும் ஊழியர்கள் மனிதவள அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஆட்குறைப்பு அனுகூலங்களைப் பெறுவர் என்று அது தெரிவித்துள்ளது. வேறு வேலை கிடைக்கவும் அவர்களை ஆதரித்து ஆலோசனை வழங்கவும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பணியாற்றத் தான் இணங்கி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்