துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்: மனிதவள அமைச்சு

துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்: மனிதவள அமைச்சு

1 mins read
b72a4e79-ac7b-40e2-a431-ae0cd8b74872
துவாஸ் சவுத் பொலிவார்டில் உள்ள சீட்ரியம் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் மாண்ட ஊழியர் வேலை செய்துகொண்டிருந்தார். - படம்: சீட்ரியம்

துவாஸ் வட்டாரத்தில் உள்ள கப்பல் பட்டறை ஒன்றில் 24 வயது ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் துருப்பிடிக்காத எஃகு குழாய் ஒன்றில் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குறிப்பிட்டது.

துவாஸ் சவுத் பொலிவார்டில் உள்ள சீட்ரியம் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்திய மனிதவள அமைச்சு, அதுகுறித்து விசாரிப்பதாகச் சொன்னது.

கப்பல் ஒன்றின் 28 அங்குல விட்டமுடைய எஃகுக் குழாயில் பற்றவைக்கும் வேலை பார்த்த ஊழியர், அக்குழாயினுள் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

அதையடுத்து, குழாயிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை துணை மருத்துவப் படையினர் பின்னர் உறுதிப்படுத்தினர்.

மாண்டவர், ஹுவா லியோங் ஆஃப்‌ஷோர் எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்.

வேலையிடங்களில் மூடப்பட்ட அனைத்து இடங்களையும் தெளிவாக அடையாளம் காண, பாதுகாப்புக் குறியீடுகளை ஒட்டிவைப்பது கட்டாயம் என்று அமைச்சு சுட்டியது.

ஒவ்வொரு பணியும் தொடங்குமுன் அது எந்த அளவு ஆபத்தானது, அந்த வேலையிடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்கிறதா போன்ற பல்வேறு அம்சங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அது நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்