ஜூரோங்கில் கத்திக்குத்துபட்டு மாது உயிரிழப்பு; ஆடவர் கைது

ஜூரோங்கில் கத்திக்குத்துபட்டு மாது உயிரிழப்பு; ஆடவர் கைது

1 mins read
Google News Preferred Icon

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 308ன் வெற்றுத் தளத்தில் நேற்றிரவு 11.55 மணியளவில் பல கத்திக்குத்து காயங்களுடன் அசைவின்றிக் கிடந்த 34 வயது மாது ஒருவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அந்தக் கொலையின் தொடர்பில் 35 வயது ஆடவரை போலிசார் இன்று (பிப்ரவரி 17) கைது செய்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்பட்டது.

இறந்துபோன பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆடவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலிஸ் தெரிவித்தது.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது, புளோக் 308ன் கீழ்த்தளத்தில் பெரிய ரத்தத் திட்டுகள் காணப்பட்டதாக சாவ் பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது.

-

சுமார் 9 மணி நேரத்துக்கு சம்பவ இடத்தில் போலிசார் தடுப்பு வேலி போட்டிருந்ததாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 10.15 மணியளவில் சம்பவ இடத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது ரத்தக்கறைகள் கழுவப்பட்டிருந்தன.

புளோக் 307ன் நடைபாதையிலும் ரத்தத் துளிகள் காணப்பட்டன.

இன்று அதிகாலை 12.05 மணியளவில் (நள்ளிரவுக்குப் பிறகு) உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைதான ஆடவர் மீது நாளை கொலைக்குற்றம் சாட்டப்படும் என்று போலிஸ் தெரிவித்தது. விசாரணைகள் தொடர்கின்றன.