சிங்கப்பூர் சொத்து முகவர்கள் நிறுவனம் (எஸ்ஆர்ஐ) திரு மோகன் சந்திரசேகரனை தன் ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராக நியமித்துள்ளது.
சொத்து விற்பனைத் துறையில் பத்தாண்டுகளுக்கு நெருங்கிய அனுபவம் கொண்டுள்ள திரு சந்திரசேகரன், 36, சிங்கப்பூர் சொத்துச் சந்தை சார்ந்த நுண்ணிய ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றுக்கும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூர் நில ஆய்வாளர்கள்-மதிப்பீட்டாளர்கள் கழகம், ‘பிசிஐ’ ஆசியா, ‘ப்ரோப்நெக்ஸ்’ சொத்து நிறுவனம், ‘ஓமைஹோம்’ போன்றவற்றில் இவர் பணியாற்றியுள்ளார்.
தன் புதிய பதவியில், திரு சந்திரசேகரன் ‘எஸ்ஆர்ஐ’யின் வர்த்தக செயல்திட்டங்களுக்கு வலுவான ஆதரவு வழங்க ஆழமான ஆய்வுகளும் தரவு பகுப்பாய்வுகளும் நடத்துவார்.
“எஸ்ஆர்ஐ அணிக்கு இப்பதவியில் திரு சந்திரசேகரனை வரவழைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”
“இவரது பதவியேற்பு, வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்ற எங்களது ஐந்தாண்டு திட்டத்திற்கு இன்றியமையாததாக இருக்கும்.” என்றார் ‘எஸ்ஆர்ஐ’ நிர்வாகப் பங்குதாரரும் துணை நிறுவனருமான திரு ப்ரூஸ் லை.
“எஸ்ஆர்ஐ அணியில் சேர்ந்ததற்கு மிகவும் இன்பமடைகிறேன். நிறுவனத்தின் விரைவான வளர்ச்சியும் தொழில்துறையில் பரவலான பங்களிப்பும் என்னை சிறப்பாகப் பங்காற்ற உற்சாகப்படுத்துகின்றன.”
“சொத்து விற்பனையில் தனித்துவமிக்க மாற்றங்களை உண்டாக்கவிருக்கும் எஸ்ஆர்ஐ திட்டங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன.” என்றார் திரு சந்திரசேகரன்.


