கல்வி, மக்கள் சேவையில் சுல்தான் பள்ளிவாசலுடன் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

கல்வி, மக்கள் சேவையில் சுல்தான் பள்ளிவாசலுடன் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

2 mins read
ceb18f89-401b-45a0-be3c-ee5821e892a8
கல்வி உதவிநிதியைப் பெற்ற தொடக்கப்பள்ளி மாணவர்கள். - படம்: தமிழ் முஸ்லிம் ஜமாஅத்
Google News Preferred Icon

தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தும் சுல்தான் பள்ளிவாசலும் இணைந்து 58வது தேசிய தின விழாவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடத்தியது. இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தின் மேயரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி (கம்போங் கிளாம்) நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி டெனிஸ் புவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவிநிதியையும் தகுதிபெறும் குடும்பங்களுக்கு உதவித்தொகையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 83 தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, உயர்கல்வி மாணவர்களுக்கு மொத்தம் $32,200 கல்வி உதவிநிதியும் 58 குடும்பங்களுக்கு மொத்தம் $8,850 உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

தமிழ் முஸ்லிம் ஜமாஅத் பல்லாண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வந்துள்ளது. தொடக்கத்தில் இந்திய முஸ்லிம்களுக்காக செயல்பட்ட இச்சங்கம் இன்று பல இனத்தவர்களுக்கும் உதவிபுரிந்து வருகிறது.

“சங்கங்கள் சமூகத்திற்காக இணையும்போது எவ்வாறு பெரும் பலனடையலாம் என்பதற்கு இன்றைய நிகழ்வு ஒரு நல்ல சான்று. நம் உறுதிமொழி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதை நேரில் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் திருவாட்டி புவா.

“சுல்தான் பள்ளிவாசல் தலைவரும் மற்ற சமூகத் தலைவர்களும் இத்திட்டத்தை மிகவும் வரவேற்கிறார்கள். அடுத்தமுறை சிங்கப்பூர் முழுவதையும் சென்றடைவதே எங்கள் குறிக்கோள். காலக்கெடுகூட இல்லாமல் விழாவிற்கு முன்தினம் விண்ணப்பித்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கினோம்.” என்றார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத்.

உடல்நலக் குறைவால் நிகழ்ச்சிக்கு வரமுடியாத 15 பேருக்கு சங்கத்தின் தொண்டர்கள் வீட்டிற்கே நேரடியாகச் சென்று நிதி வழங்குவர்.

“கல்வி என்பது நாகரிகம் உடைய சமுதாயத்தின் அடையாளம். செல்வம் செலவிட செலவிட குறையும்; ஆனால் கல்வியோ பயன்பட பயன்பட அதிகரிக்கும்,” என கல்வியின் மகத்துவத்தை வர்ணித்தார் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் தலைமை இமாம் மெளலவி ஹாஃபிழ் முஹம்மது அஸீஸுல்லாஹ் ஹஸனி.

“தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்கியதைப் பெரிதும் பாராட்டுகிறேன்,” என்றார் சுல்தான் பள்ளிவாசல் அறங்காவலர் வாரியத் தலைவரும் பள்ளிவாசல் நிர்வாக வாரிய துணைத் தலைவருமான முஹம்மது பட்டேல்.

“இது ஒரு நல்ல முயற்சி. பிள்ளைகளுக்குக் கல்வியில் சிறப்பாகச் செய்வதற்கு ஒரு நல்ல ஊக்குவிப்பாக அமைகிறது,” என்றார் நிகழ்வில் பங்கேற்ற பரதத்துனிஷா, 45. “இந்தியர்களின் கலாசாரத்தைப் பற்றி அறிய இந்நிகழ்ச்சி உதவியது,” என்றார் ரூஹிலா, 15.

மற்ற தமிழ் முஸ்லிம் குழுக்களுடன் ஒன்றிணைந்து அடுத்தமுறை $100,000 மதிப்புள்ள உதவித்தொகையை வழங்கி சமூகத்திற்கு மேலும் தொண்டுபுரிவதே இச்சங்கங்களின் இலக்கு.

குறிப்புச் சொற்கள்