இயற்கையை சுவாசிக்கும் சிங்கப்பூரின் கடைசி கிராமம்

இயற்கையை சுவாசிக்கும் சிங்கப்பூரின் கடைசி கிராமம்

3 mins read
785acb79-ca0d-4a28-9cab-fa72ee96b894
திருவாட்டி சிங் முய் ஹாங்குடன் திரு சுப்ரமணியம் ரத்னம் - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2
Google News Preferred Icon

வானளாவிய கட்டடங்கள், பசுமை பரப்பும் மரங்கள், நவீனமயமாகி வரும் பரபரப்புமிக்க வாழ்க்கைச் சூழல் என சிங்கப்பூர் அதிநவீன நகரமாக பரிணாமம் கண்டுள்ளது. இந்த நகரத்திலும் பழைய கம்போங் அதாவது கிராம வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

புவாங்கோக் பகுதியில் உள்ளது சிங்கப்பூர் நகரின் ஒற்றை குட்டிக் கிராமம். 1956ல் உருவாக்கப்பட்ட இந்த கம்போங் லோரோங் பூவாங்கோக்கில் 26 குடும்பங்கள் இன்னும் தங்களின் அழகான தரை வீடுகளில் வாழ்கின்றன.

இந்தக் கம்பத்துக்கு அடிக்கடி வருவோர் அறிந்திருக்கும் முகங்களில் ஒன்று திருவாட்டி சிங் முய் ஹாங். 70 வயதாகும் இவர் கடந்த 67 ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலம் இவரது தந்தையுடையது. இவர் தற்போது வசிக்கும் வீடு இவரது அப்பா கட்டியது. கம்போங்கிலுள்ள மற்ற வீடுகளின் மூலம் கிடைக்கும் வாடகையில் இவர் வாழ்க்கையை நடத்துகிறார்.

பலா மரங்கள், ஸ்டார்புருட் மரங்களை வீட்டைச் சுற்றிலும் வளர்த்துள்ள திருவாட்டி சிங் முய் ஹாங், பூச்செடிகளையும் நிறைய வைத்துள்ளார். மரங்களும் செடிகளும் நிறைந்திருப்பதாலும் நகரின் பல இயற்கைப் பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டதாலும் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, குரங்கு, அணில் போன்ற மிருகங்களை இங்கு காணலாம். அவற்றுடன் வளர்ந்த திருவாட்டி சிங் முய் ஹாங்கிற்கு அவை குறித்த பயம் இல்லை.

திருவாட்டி சிங் முய் ஹாங்கை காண வரும் அவரின் நண்பர்களில் ஒருவர் 68 வயது சுப்ரமணியம் ரத்னம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவர் 1971ல் சிங்கப்பூருக்கு வந்தார். இந்தக் கிராமத்திற்குப் பக்கத்தில் முன்பு இருந்த பொதுப் பணித்துறை ஊழியர்களுக்கான குடியிருப்பில் (பிடபுள்யூ குவார்ட்டர்ஸ்) வசித்த சின்னம்மாவைப் பார்க்க 40 ஆண்டுகளுக்கு மேலாக வந்து போகிறார் சுப்ரமணியம். சின்னம்மா வீட்டுக்குப் போக இந்தக் கிராமத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

மலேசியாவில் இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்த சுப்ரமணியத்துக்கு, சிங்கப்பூரின் இந்தக் கிராமம் பழைய நினைவுகளைத் தூண்டியது. சின்னம்மாவின் குடியிருப்பு நகரமேம்பாட்டுக்காக அகற்றப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த கிராமத்தின் பக்கம் அவர் வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிராமத்தைச் சுற்றி பார்க்க வந்தபோது பழைய நண்பரான திருவாட்டி சிங் முய் ஹாங்கைச் சந்தித்தார். இப்போது அவரைக் காண இங்கு அடிக்கடி வருகிறார்.

ஓய்வு பெற்ற திரு சுப்ரமணியத்திற்கு திருவாட்டி சிங் முய் ஹாங்கின் தோட்டத்தில் வேலை செய்வதும் அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே பழைய கதைகளைப் பேசுவதும் பொழுதுபோக்காக உள்ளது. அவருடைய தோட்டத்தில் முருங்கை மரம், கீரைகளை நட்டு பராமரிக்கிறார். அவர் இங்கு வரும்போதெல்லாம் திருவாட்டி சிங் முய் ஹாங் அவருக்கு மாம்பழம் பறித்துத் தருவார். வாரத்திற்கு ஒருமுறை நடக்க அல்லது மெதுவோட்டம் ஓட இங்கு வரும் சுப்ரமணியம் தனது பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்து வருவார்.

திருவாட்டி சிங் முய் ஹாங்குடன் தற்போது அவரது சகோதரரின் பிள்ளைகள் வாழ்கின்றனர். அரசாங்கம் இந்த நிலத்தை நகரமறுசீரமைப்புக்காக எடுக்கும் வரையில் இங்கேயே வசிக்க முடிவுசெய்துள்ளார்.

“நவீன நகரத்தில் இப்படியான கம்பத்து வாழ்க்கை அரிதான அனுபவம். இந்தக் கிராமம் அகற்றுப்படும்வரையில் நான் இங்கு வருவேன்,” என்றார் திரு சுப்ரமணியம்.

புவாங்கோக் கம்பத்தைக் காணொளியில் காண மேலுள்ள க்யூஆர் குறியீட்டை வருடவும்.

குறிப்புச் சொற்கள்