மின்னிலக்கக் கடலில் மின்னுகிற மீனவர்

மின்னிலக்கக் கடலில் மின்னுகிற மீனவர்

3 mins read
afddc9a5-1c1a-4734-a131-ac0450630bd5
பெரிய மீன் ஒன்றைத் தூக்கி நிற்கும் உடற்கட்டு ஆர்வலர் திரு வி. ஹரிஷ். - படம்: வி. ஹரிஷ்
Google News Preferred Icon

உறுதியான உடற்கட்டை அடைவதற்கான பாதை, சொகுசான உடற்பயிற்சிக்கூடத்தில் தொடங்கவேண்டும் என்றில்லை என்கிறார் இன்ஸ்டகிராமில் வாழ்வியல் தொடர்பான பக்கம் ஒன்றை வைத்திருக்கும் வி. ஹரிஷ்.

சென்னையின் காசிமேடு பகுதியில் மீனவர் குடும்பத்தில் பிறந்த திரு வி. ஹரிஷ், 24, எளிமையான சூழலில் வளர்ந்தார். சாப்பாடு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக சிரமப்பட்டு கவனமாக கணக்கிட்டுச் செலவு செய்தவர், இப்போது உடற்கட்டுத் துறையில் சாதித்து வருகிறார்.

2021ல் ‘மிஸ்டர் இந்தியா’, மூன்று ஆண்டுகளுக்கு ‘மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி’ மற்றும் ஏகப்பட்ட ‘மிஸ்டர் தமிழ்நாடு’ விருதுகளை இவர் வென்று குவித்துள்ளார்.

உடற்கட்டை மேம்படுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லாததை நினைவுகூர்ந்த திரு ஹரிஷ், இன்ஸ்டகிராம் வழியாக பலருக்கும் குறிப்புகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறார்.

மனித உடலுக்குரிய ஆற்றலைக் கொண்டாடும் வகையில் உடற்பயிற்சிக்கூடத்தில் எடை தூக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதுடன் தற்காப்புக் கலையிலும் நடனத்திலும் இவர் நாட்டம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். யோகா பயிற்சியிலும் ஈடுபட்டுள்ள திரு ஹரிஷ், தேசிய நிலையில் பல விளையாட்டுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

2016ல் தொடங்கப்பட்ட திரு ஹரிஷின் இன்ஸ்டகிராம் பக்கம், தற்போது 106 ஆயிரம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. பக்கத்தைத் தொடங்கியபோது தம் பக்கத்தை இத்தனை பேர் பின்தொடர்பார்கள் என்பதைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறிய இவர், தொடக்கத்தில் எளிமையான பதிவு ஒன்றை பதிவேற்றம் செய்ததாகச் சொன்னார்.

“தொடக்கத்தில் 38 கிலோகிராம் எடையுள்ள நான், படிப்படியாக 62 கிலோகிராம் எடையை, ஊக்க மருந்து எதுவும் இன்றி இயற்கையான முறையில் கூட்டினேன். என் வெற்றியைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த பிறகு இணையவாசிகள் பலர் என்னை அணுகினர்,” என்று திரு ஹரிஷ் கூறினார்.

பலரும் இவரது வழிகாட்டலை நாட, குறைந்த விலையில் 79 ரூபாய்க்கு திரு ஹரிஷ், தம்மை நாடும் ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி அட்டவணை மற்றும் உணவுத் திட்டத்தை உருவாக்கினார். இத்திட்டங்களைப் பின்பற்றி தங்களை உடற்கட்டுடையவர்களாக உருமாற்றியதைக் காணும்போது மேலும் ஊக்கமடைவதாகக் கூறுகிறார்.

எங்கே பிறந்து உயர்ந்தோம் என்பதை மறவாதிருக்க, தம் உடற்கட்டைக் மீனவத்துறையைப் பிரபலப்படுத்த எண்ணியதாகக் கூறினார்.

“என் மீனவப் பாரம்பரியம் என்னைப் பொறுத்தவரை எனக்கு தனித்துவத்தைத் தருகிறது. திரிவலி, சுறா, கணவாய் உள்ளிட்ட மிகப்பெரிய கடல்வாழ் இனங்களைத் தூக்கிக்கொண்டு புகைப்படங்களுக்கு நிற்கிறேன்,” என்று திரு ஹரிஷ் கூறினார்.

புதிதாகச் சமூக ஊடகப் பக்கம் ஒன்றை பிரபலப்படுத்தும்போது ஒருசிலர் பதியும் எதிர்மறையான வாசகங்களைப் பொறுத்துக்கொண்டு பணியில் கண்ணாய் இருக்கவேண்டும் என்றார் திரு ஹரிஷ்.

“என்னைப் பலர் அறியவந்தபோது உடற்கட்டு ஆர்வலர்கள் பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பிறருக்கு நேரடியாகவும் பயிற்சி அளித்து வருகிறேன். சமூக ஊடக வெளியில் அவர்கள் கொடுக்கும் ஆதரவுக் குரலால் எதிர்மறைக் கருத்துப்பதிவுகள் வெகுவாகக் குறைந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பச் சூழல் போன்றவற்றில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நம்மை நாமே விட்டுக்கொடுக்காமல் ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, நல்ல ஆடைகளை உடுத்துவது, கல்வியையும் திறன்களையும் பெருக்குவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதைத் தம்மைப் பின்தொடரும் இளையர்களிடம் தெரிவிக்க விரும்புவதாக திரு ஹரிஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்