திருப்பதி லட்டில் அசைவம்: நடவடிக்கையில் இறங்குகிறது மத்திய அரசு

திருப்பதி லட்டில் அசைவம்: நடவடிக்கையில் இறங்குகிறது மத்திய அரசு

2 mins read
a5de36ee-5aed-45ef-bc3e-25e4353f1df3
லட்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் தரத்தை ஆய்வுசெய்யத் தேவையான ஆய்வகங்கள் திருப்பதி தேவஸ்தானத்திடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்புகொண்டு அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன். இதுதொடா்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். அவரிடம் உள்ள ஆய்வறிக்கையை என்னிடம் பகிருமாறு கேட்டுள்ளேன்.

“அதை ஆய்வு செய்து தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றாா்.

மத்திய உணவுத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘திருப்பதி லட்டு விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும்,” என்றாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வாக அலுவலா் ஜெ.ஷியாமளா ராவ் கூறுகையில், “லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் மிகவும் குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் லட்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் தரத்தை ஆய்வுசெய்ய முறையான உள்ஆய்வகங்கள் இங்கு இல்லை.

“வெளி ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுத்தான் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தரமற்ற பொருள்களை நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன,” என்றாா்.

முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

அதனை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துள்ளது.

அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆந்திர உயா் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

முன்னதாக, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை தெலுங்கு தேசக் கட்சியின் வெங்கடரமணா ரெட்டி வெளியிட்டுள்ளார்.

லட்டு தயாரிப்பில் பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்துள்ளதை அந்த ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்