புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் இருந்து மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறந்தது அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பராய்க் ஆகிய இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
அசாம் மாநிலம் சில்சார் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்பியான சுஷ்மிதா தேவ், 2021ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் டிஎம்சி கட்சியில் இணைந்த அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் மம்தா பானர்ஜி.
அதன் பின்னர் டிஎம்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த சுஷ்மிதா தேவ், தற்போது திடீரென பதவியை உதறிவிட்டு பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.
டிஎம்சி கட்சியின் மூத்த தலைவரான சுகேந்து சேகர் ராய் அண்மையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், இரண்டாவதாக சுஷ்மிதாவும், மூன்றாவதாக பிரகாஷ் சிக் பராய்க் பதவி விலகியுள்ளனர்.
பதவி விலகலுக்குப் பிறகு அளித்த பேட்டியில், தமது முடிவுக்கு பாஜகவின் நெருக்கடி காரணம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தன்னிடம் என்ன கேட்டாலும் அதைச் செய்யத் தயார் என்றும் கூறினார் பிரகாஷ் சிக் பராய்க்.
அடுத்தடுத்து மூன்று எம்பிக்கள் விலகியது மம்தா தரப்புக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, டிஎம்சியைச் சேர்ந்த மேலும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

