பனி இல்லாத காஷ்மீரில் பணியும் இல்லை, பணமும் இல்லை

பனி இல்லாத காஷ்மீரில் பணியும் இல்லை, பணமும் இல்லை

2 mins read
8160ee1a-0008-4a87-b38e-1893447f163a
மலைகள் மற்றும் திறந்தவெளி பிரதேசங்கள் இவ்வாண்டு வறண்டு, பழுப்பு நிறமாகக் காட்சி அளிக்கின்றன. - படங்கள்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

காஷ்மீர்: உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் காஷ்மீர் முன்னணியில் உள்ளது.

பனிப்பொழிவால் சூழ்ந்த மலைகள், பனிச்சறுக்கு விளையாட்டு, பனியில் குதிரைகளால் இழுக்கப்படும் வண்டியில் பயணித்தல், குதிரைச் சவாரி, கம்பிவண்டிப் பயணம், படகு வீடு உள்ளிட்டவற்றை அனுபவிக்க மக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருப்பது வழக்கம்.

நவம்பர் மாதத்திலிருந்தே சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு தங்க இடம் கிடைப்பது அரிது.

ஆனால், இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மலைகள் மற்றும் திறந்தவெளி பிரதேசங்கள் இவ்வாண்டு வறண்டு, பழுப்பு நிறமாகக் காட்சி அளிக்கின்றன. பனிச்சறுக்குப் பிரதேசங்கள் காலி மைதானங்களாகக் காட்சி தருகின்றன.

குடும்பத்தினருடன் உலகெங்கும் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் சாதாரண பிரதேசம் போல் காட்சி தரும் காஷ்மீரைக் கண்டதும், ஏமாற்றத்துடன் ஓட்டல் அறைகளை காலி செய்து புறப்படுகின்றனர். இத்தகவல் பரவியதால் முன்பதிவு செய்த பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் பதிவுகளை ரத்து செய்து விட்டனர்.

சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய், காஷ்மீர் மக்களுக்கு நீண்ட காலமாக குடும்ப வருமானமாக இருந்து வந்த நிலையில் காஷ்மீரின் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த காஷ்மீரில் இவ்வாண்டு பாதியளவு கூட பயணிகள் இல்லை.

மேலும் “பனியில்லாத பருவகாலம்” நீடித்தால், நிலத்தடி நீர் வரத்தும் குறைந்து விடும் என்றும் நீர்மின் உற்பத்தி, மீன் வளம், விவசாயம் உள்ளிட்டவைகளும் நலிந்து விடும் என்றும் வானியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் வானிலை மையம், கடந்த 2023 டிசம்பர் மாத மழைப்பொழிவு கடந்தாண்டை விட 79 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், 2024 ஜனவரி மாதம் 100 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் அறிவித்தது.

90களில் 3 அடி உயரத்திற்கு பனி மூடியிருந்த காஷ்மீர், தற்போது வறண்டிருப்பதை போல் மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கிலும் நிலைமை இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்