ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்

1 mins read
0e59b516-be50-4e82-a346-6a1d0fb64cd0
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக ஊர்வலம் செல்லும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

குப்பம்: ஆந்திராவில் நீர்நிலைகள் பராமரிக்கப்படாததைக் கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக அணைக்கட்டுகள் உள்ள ஊர்களுக்கு தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திறந்தவெளி வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தின் தம்பலபல்லி, புங்கனூர் தொகுதிகளுக்குள் நுழையும்போது ஆளும் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த இரண்டு கட்சியைச் சேர்ந்தோருக்கும் கைகலப்பு ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. சந்திரபாபு நாயுடுவுக்கு கறுப்புக்கொடி காட்டி அவர் மீது கற்களை வீசியெறிந்தனர்.

சந்திரபாபு நாயுடு மேலும் முன்னேறிச் செல்லாத வகையில் அவர் செல்லும் சாலை நடுவே கனரக வாகனங்களை நிறுத்திவைத்தனர். அதையடுத்து கலவரம் முற்றியது. இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

இதில் காவல்துறையினர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால், தெலுங்கு தேசம் கட்சியை கண்டித்து நேற்று சித்தூர் மாவட்ட பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளும்கட்சியினர் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். சித்தூர் மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் கடைகளை அடித்து நொறுக்கினர்.

அப்போது அவ்வழியே சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்றின் கண்ணாடிகளை அடித்துநொறுக்கினர். அதில் இருந்த 40 பயணிகள் செய்வதறியாது பேருந்தைவிட்டு இறங்கி ஓடினர்.

குறிப்புச் சொற்கள்