வாட்டும் வெயிலால் கங்கைக் கரையில் குவியும் பிணங்கள்

வாட்டும் வெயிலால் கங்கைக் கரையில் குவியும் பிணங்கள்

2 mins read
09c99032-56a8-4dac-b9db-4a6c3c0ffbe0
மூச்சுப் பிரச்சினை காரணமாக பலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது 85 வயது தாத்தாவுடன் பிரிஜேஷ் யாதவ், 28. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வடஇந்தியாவை வெயில் வாட்டி வருவதால் கங்கைக் கரையில் உள்ள ஒரு தகனச் சாலைக்கு வரும் பிணங்களின் என்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாக இந்து சமய குரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த நான்கு, ஐந்து நாள்களாக இங்கு நிலைமை மாறிவிட்டது. 25 முதல் 30 பிணங்கள் வருகின்றன. இங்குள்ளோர் இரவும் பகலும் அனலில் தகிக்கின்றனர்,” என்று தகனச் சாலையில் இறுதிச் சடங்குகளைச் செய்யும் திரு ராஜேஷ் பாண்டே தெரிவித்தார்.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், பலியா நகரிலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே.யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறப்பு அதிகரித்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்கெனவே வேறு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் வாழ்வில் இறுதிக்கட்டத்தில் இருந்தனர்,” என்றார் டாக்டர் யாதவ்.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அந்த மருத்துவமனையில் குறைந்தது 80 மரணங்கள் பதிவாகியிருப்பதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

அவ்வட்டாரத்தில் கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ்வரை வெயில் கொளுத்தியது. புதன்கிழமை மேகமூட்டமாக இருந்தது மக்களுக்குச் சற்று நிம்மதி அளிப்பதாக அமைந்தது.

பலியாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, வெயிலே அதற்குக் காரணம் எனக் கூறியதற்காக மாவட்ட சுகாதார அதிகாரி மாற்றப்பட்டார்.

இதனிடையே, மருத்துவமனை நிரம்பி வழியும் நிலையில் வெயில் கொடுமையிலிருந்து விடுபட மின்விசிறியின்கீழ் குவிகின்றனர்.

மூச்சுவிடச் சிரமப்பட்டதால் தம்முடைய 85 வயது தாத்தா மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டதாக திரு பிரிஜேஷ் யாதவ், 28, என்பவர் சொன்னார்.

“இதற்கு வெப்பமே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்றார் அவர்.

தேவையின்றி மின்சாரத்தைத் துண்டிப்பதைத் தவிர்க்குமாறும் தேவைப்பட்டால் கூடுதல் மின்சாரத்தை வாங்குமாறும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலமான பீகாரில் வெப்பம் சார்ந்த நோய்களால் குறைந்தது 50 பேர் மாண்டுவிட்டதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி, ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரையிலும் சராசரியாகக் குறைந்து ஐந்து முதல் ஆறு வெப்ப அலை நிகழ்வுகளை இந்தியா எதிர்கொள்கிறது.

பருவநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகளால் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு இந்தியர்கள் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளாலும் உணவுப் பற்றாக்குறையாலும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்