ஐநாவின் சிறப்பு மனிதநேய விருது பெற்றார் சோனு சூட்

ஐநாவின் சிறப்பு மனிதநேய விருது பெற்றார் சோனு சூட்

2 mins read
7afe5871-413d-49dc-a12d-38ca379a3e1e
படம்: ஊடகம் -
Google News Preferred Icon

திரைப்படங்களில் வில்லன் வேடமேற்றாலும் உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி வந்த திரு சோனு சூட்டுக்கு ஐநா மேம்பாட்டுத் திட்டத்தின் சிறப்பு மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறார் திரைத்துறையைச் சேர்ந்த திரு சோனு சூட்.

வேலையின்றி, பொதுப் போக்குவரத்துமின்றி தென்னிந்தியாவில் சிக்கித் தவித்த வட இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரை நோக்கி பல்லாயிரம் மைல் தூரத்துக்கு நடந்தே சென்ற துயரம் அரங்கேறிய வேளையில், அவர்களை தனியார் பேருந்துகளில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து பேருதவி புரிந்தார் திரு சோனு சூட்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை தமது சொந்த செலவில் விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்தார்.

கைபேசி இல்லாமல் இணையம் வழி கல்வியில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு கைபேசி, தெருவோரம் காய்கறி விற்கும் பாட்டிக்கு உதவி என இவர் அண்மைய மாதங்களில் செய்த உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை திரு சோனு சூட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஏற்கெனவே, பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்காம், லியோனார்டோ டிகாப்ரியோ ஆகிய உலக புகழ் பெற்ற சிலர் மட்டுமே பெற்றிருக்கும் இவ்விருதினை சோனு சூட்டும் இப்போது பெற்றுள்ளார்.

"இது ஓர் அரிய மரியாதை. ஐநா அங்கீகாரம் சிறப்பு மிகுந்தது. என் நாட்டு மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறேன்," என்று திரு சோனு சூட் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி திரைப்படங்களில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கிறார் திரு சோனு.

குறிப்புச் சொற்கள்