ஹவாலா பணத்தைக் களவாடிய காவலர்கள் கைது

ஹவாலா பணத்தைக் களவாடிய காவலர்கள் கைது

1 mins read
bff34a2f-8b98-4ff6-9546-51f42d470904
மொத்தம் 11 பேர் மீது கொள்ளை, கடத்தல், சதி ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவான நிலையில், ஆறு பேர் தலைமறைவாகி உள்ளனர். - சித்திரிப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

போபால்: ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையின் தனிப்படை, அதில் பாதித் தொகையை மட்டுமே வெளியே அறிவித்துவிட்டு, மற்றொரு பாதியை மறைத்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து காவல்துறையினர் ஏறக்குறைய ரூ.2.9 கோடி ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்ததாகவும், எனினும் அது குறித்த அதிகாரபூர்வ அறிக்கையில் பாதித் தொகையை மட்டுமே குறிப்பிட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, தனிப்படையைச் சேர்ந்த ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 11 பேர் மீது கொள்ளை, கடத்தல், சதி ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவான நிலையில், ஆறு பேர் தலைமறைவாகி உள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப்படை ஒன்றை அமைக்க இருப்பதாக ஜபல்பூர் பகுதி காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தங்கள் கடமைகளை மறந்துவிட்டுச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மத்தியப் பிரதேசம்ஹவாலாபணம்காவல்துறைஅதிகாரிBUSINESSMAN