புதுடெல்லி: நமது முன்னோர்கள்தான் அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள், கொலம்பஸ் அல்ல என்று மத்தியப் பிரதேச மாநில உயர்கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ராமர் சிலைகளை உருவாக்கிய கட்டடக் கலைஞர்களின் உதவியுடன்தான் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது, ரிக் வேதத்தை எழுதியவர்கள்தான் பூமியை சூரியன் சுற்றுகிறது என்பதை கணித்திருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில்தான் இந்தர் சிங் பர்மர் உயர்கல்வி அமைச்சராக உள்ளார்.
இவர், செவ்வாய்க்கிழமை போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படேல், முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“தவறான உண்மைகள் காரணமாக, இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான எண்ணத்தை பதிய வைத்துவிட்டார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் இந்தியாவின் பலத்தை கீழறுத்துவிட்டார்கள்,” என்றும் இந்தர் சிங் பர்மர் தெரிவித்ததாக இண்டியன் எக்ஸ்பிரஸ் தகவல் குறிப்பிட்டது.
“நமது முன்னோர்கள் அறிவு, திறமை மற்றும் திறன் ஆகிய அனைத்து அம்சங்களிலும் முன்னேறியவர்கள். நாம் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, உயர்ந்த எண்ணங்களைத் தழுவி முன்னேற வேண்டும்.
“ஒரு இந்திய மாலுமி 8ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். அவை இன்னும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு நூலகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“வாஸ்கோடகாமா, சாந்தனின் கப்பல் தனது கப்பலைவிட பெரியது என்று எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரியது மட்டுமல்ல, அவருடைய கப்பலைவிட இரண்டு முதல் நான்கு மடங்கு பெரியது என்று குறிப்பிட்டுள்ளார். வாஸ்கோடகாமா இந்திய வர்த்தகரான சாந்தனைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால், இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்கு தவறாகக் கற்பிக்கிறார்கள்.
“ஏறக்குறைய 1,200-1,300 ஆண்டுகளாக, புவியியல் தவறான கருத்துகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க பொய் உலகம் முழுவதும் நிலைத்திருக்கிறது. போலந்து வானியலாளர் கோபர் நிக்கஸின் கோட்பாடு சூரியன் நிலையானது. கலிலியோ சொன்னது சூரியன் நிலையானது மற்றும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன. ஆனால், இது நமது பண்டைய நூல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.
“பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரிக்வேதத்தை எழுதியவர்கள், சந்திரன் தனது தாய் கிரகமான பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமி அதன் பெற்றோரான சூரியனைச் சுற்றி வருவதாகவும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, நமது முன்னோர்கள் ஏற்கனவே சூரியனை நிலையானதாகக் கருதினர். பூமி, சந்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன.
“இதில், ஆர்வமான வரலாற்று உண்மை என்னவென்றால், 12ஆம் நூற்றாண்டில், பெய்ஜிங் நகரம் நிறுவப்பட்டபோது, அதன் வடிவமைப்புகளும் கட்டடக்கலைகளும் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு கட்டடக் கலைஞரால் உருவாக்கப்பட்டது, ஆனால், அது அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.
“பால் பாஹு என்று பெயரிடப்பட்ட இந்த கட்டடக் கலைஞர், புத்தர் மற்றும் ராமர் சிலைகளை உருவாக்குவதிலும், பிரமாண்டமான கட்டடங்களை வடிவமைப்பதிலும் பெயர் பெற்றவர். பெய்ஜிங்கை வடிவமைக்க அவர் அழைக்கப்பட்டார். இன்றும் கூட, பால் பாஹுவின் பங்கை அங்கீகரித்து, அரசாங்கத்தால் பெய்ஜிங்கில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது,” என்று இந்தர் சிங் பர்மர் மேலும் தெரிவித்துள்ளார்.

