புதுடெல்லி: இந்தியாவில் இணையக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக, மின்னிலக்க கைது மோசடி போன்ற சம்பவங்கள் மூலம் பணத்தை இழந்து தவிப்போர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இத்தகைய மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதே குற்ற எண்ணிக்கை குறைய முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2025ல் நாடு முழுவதும் மொத்தம் 17,264 இணையக் குற்றங்கள் பதிவாகி உள்ளன. பொதுமக்கள் பறிகொடுத்த தொகை ரூ.644 கோடியாகும்.
இந்தியாவில் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை, இணையவழிச் சேவைகள் அதிகரித்து வரும் அதே வேகத்தில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இணையக் குற்றங்கள் தொடர்பாக, ஏறக்குறைய 40,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 91 கோடி ரூபாயைப் பொதுமக்கள் இழந்தனர்.
2023ல் மோசடிக்காரர்கள் ஏமாற்றிப் பறித்த தொகை 272% அதிகரித்து, ரூ.339 கோடியானது.
2024ஆம் ஆண்டு நிலைமை மேலும் மோசமடைந்த நிலையில், நாடு முழுவதும் 1.23 லட்சம் வழக்குகள் பதிவாயின.
மக்கள் பல்வேறு வகையிலும் மோசடிக்கு ஆளாக்கப்பட்டு, ரூ.1,918 கோடி இழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மத்திய, மாநில அரசுகளும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டின.
இதன் எதிரொலியாக, 2025ஆம் ஆண்டு இணையக் குற்றங்களின் எண்ணிக்கையும் பறிகொடுத்த தொகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

