அகமதாபாத்: மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு பலத்த அடியைக் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
ஊடுருவலுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் படேல் முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை என்றார்.
“எத்தகைய அச்சுறுத்தலையும் நாங்கள் துடைத்தெறிவோம். காங்கிரஸ் பிரிட்டிஷாரிடம் இருந்து அடிமை மனநிலையைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குள் சென்றது.
“தற்போது நக்சல் பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்படுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் வலிமை குறித்து காட்டப்பட்டு உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முந்திய அரசாங்கம் சமரசம் செய்து கொண்டது,” என்று கடுமையாக விமர்சித்தார் திரு மோடி.
ஊடுருவல்காரர்களால் நாட்டின் ஒற்றுமைக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்தியா தற்போது உறுதியான, தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றார்.

