காஷ்மீரில் மர்ம நோய்: அரசு மருத்துவர்களின் விடுப்பு ரத்து

காஷ்மீரில் மர்ம நோய்: அரசு மருத்துவர்களின் விடுப்பு ரத்து

1 mins read
60433079-404d-4ffc-a8fa-1bd14c954f29
ஜம்மு-காஷ்மீரில் மர்ம நோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களைக் கண்காணிக்க காவல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்த் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்குள்ள ரஜோரி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களின் விடுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரஜோரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அமர்ஜீத் சிங் பாட்டியா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 17 பேர் மர்ம நோய் தாக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு மருத்துவர்களின் விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மர்ம நோய் இறப்புகளுக்கு மூளைப் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு ஆகியவையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள ஜம்மு-காஷ்மீர் அரசு, ரஜோரி அரசு மருத்துவமனைக்கு 10 கூடுதல் மருத்துவ மாணவர்களை அனுப்பியுள்ளது,” என திரு சிங் தெரிவித்தார்.

மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது.

“ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையிலும், சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சற்று தேறியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் சிற்றூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்