இமயமலைப் பகுதியில் சுரங்கப் பாதையைத் திறந்துவைத்தார் மோடி

இமயமலைப் பகுதியில் சுரங்கப் பாதையைத் திறந்துவைத்தார் மோடி

1 mins read
61e20775-9c40-4b63-916f-7e06bb70cde9
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடமிருந்து இரண்டாவது), ஜனவரி 13ஆம் தேதி, உத்திபூர்வ சுரங்கப் பாதையைத் திறந்துவைத்தார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஸ்ரீநகர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 13ஆம் தேதி, இமயமலைப் பகுதியில் உத்திபூர்வ சுரங்கப் பாதையைத் திறந்துவைத்துள்ளார்.

பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட US$313 மில்லியன் (430 மில்லியன் வெள்ளி) செலவில் அந்தச் சுரங்கப் பாதை கட்டப்பட்டுள்ளது.

சோனாமார்க் சுரங்கப் பாதை, வானிலை எப்படியிருந்தாலும் நாட்டின் வடபகுதியைச் சென்றடைய உதவும் என்று கூறப்படுகிறது.

ஆண்டில் நான்கு முதல் ஆறு மாதங்களுக்குப் பனி சூழ்ந்து துண்டிக்கப்படும் கணவாய்ப் பகுதியில் 6.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளுக்கு இட்டுச்செல்லும் பரந்த உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக அது கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியை லடாக் வட்டாரத்துடன் இணைக்கும் அந்தச் சுரங்கப் பாதை, ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையைத் திறப்பதற்கான படிக்கல்லாகக் கருதப்படுகிறது. ராணுவத் தளவாடங்களை ஆண்டின் எந்தக் காலகட்டத்திலும் விரைவாகக் கொண்டுசெல்ல அந்த நெடுஞ்சாலை கைகொடுக்கும்.

அதே பாதையில் அமைந்துள்ள 13 கிலோமீட்டர் நீளங்கொண்ட ஸோய்ஜிலா சுரங்கப் பாதையின் கட்டுமானம் பாதிக்குமேல் முடிவடைந்துவிட்டதாகவும் 2026ஆம் ஆண்டு அது திறக்கப்படவிருப்பதாகவும் இந்தியத் தகவல் அமைச்சு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்