நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பிறகே சுரங்கப் பணிகள் தொடங்கப்படும்: கேரள முதல்வர்

நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பிறகே சுரங்கப் பணிகள் தொடங்கப்படும்: கேரள முதல்வர்

1 mins read
31396c7c-e1e9-4414-9f87-15d6c5131d16
கோழிக்கோடு- வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் நுழைவாயில் அருகே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.  - படம்: த இந்து
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பின்னரே, அங்கு மீண்டும் சுரங்கப் பணிகள் தொடங்கப்படும் என்று கேரள முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதை அவர் கூறினார்.

“வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு குறித்து கேரள அரசாங்கம் தொழில்நுட்பம் சார்ந்தும் சட்டம் சார்ந்தும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டுமான நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றியதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.

“சம்பவம் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டு கிடந்த மண் முழுவதையும் அகற்ற கடந்த மாதமே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் ஒப்பந்ததாரர்கள் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“அதிகாரிகளும் பேரிடர் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தனர்,” என்று வி.டி.சதீசன் கூறினார்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கோழிக்கோடு- வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் நுழைவாயில் அருகே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில் சிக்கி குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்