மகாராஷ்டிரா: டிஜிபி இடமாற்றம், போட்டியிலிருந்து மராத்தா சமூகம் பின்வாங்கல்

மகாராஷ்டிரா: டிஜிபி இடமாற்றம், போட்டியிலிருந்து மராத்தா சமூகம் பின்வாங்கல்

2 mins read
1192f36d-5d0f-4f9d-a71b-7acef2a975e0
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தேர்தலில் முக்கிய விஷயமாகத் திகழும். அச்சமூகத்தின் தலைவரான மனோஜ் ஜரங்கே கைகாட்டுபவருக்கே அச்சமூகம் வாக்களிக்கும் எனக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் புகார்களைத் தொடர்ந்து டிஜிபி ராஷ்மி சுக்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுக்லாவின் பொறுப்பை அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும், டிஜிபியாக நியமனம் செய்ய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனுப்புமாறும் மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கைப்பேசிகளை ஒட்டுக் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வதுடன், தங்கள் கடமைகளைச் செய்யும்போது கட்சி சார்பற்றவர்களாக உணரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அண்மைய ஆய்வுக் கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரித்தார்.

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதாகவும் மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜரங்கே திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

மனோஜ் ஜரங்கேவின் முடிவால், பாஜகவுக்கு எதிரான மராத்தா மக்களின் வாக்குகள் காங்கிரசுக்கு சிதறாமல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

“மற்றவர்களை தோற்கடிப்பதற்காக எனது சமூகத்தின் செல்வாக்கை பயன்படுத்த விரும்பவில்லை. பலமுறை யோசித்த பிறகு, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

“யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. மராத்தா சமூகத்தினருக்கு நன்மை செய்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கட்டும். மராத்தா மக்களை துன்புறுத்தியவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும்,” என்று முடிவு குறித்துப் பேசிய முடிவு குறித்து மனோஜ் ஜரங்கே கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மராத்தா சமூகத்தினரின் வாக்குகளும், மனோஜின் போராட்டமும் அமைந்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
மகாராஷ்டிராசட்டமன்றம்தேர்தல்