ரூ.75 லட்சம் பரிசு விழுந்ததை அறிந்ததும் காவல் நிலையத்திற்கு ஓடினார்!

ரூ.75 லட்சம் பரிசு விழுந்ததை அறிந்ததும் காவல் நிலையத்திற்கு ஓடினார்!

1 mins read
2f501803-fdef-4103-94f7-5cb7fea89be7
தம் நண்பருடன் அதிர்ஷ்டசாலி பதேஷ் (இடது). படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

எர்ணாகுளம்: தாம் வாங்கிய அதிர்ஷ்டச் சீட்டிற்கு ரூ.75 லட்சம் (S$122,000) பரிசு விழுந்ததும் ஆடவர் ஒருவர் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.பதேஷ் என்ற ஆடவர், கேரள அரசாங்கத்தின் அதிர்ஷ்டக் குலுக்கலில் தமக்கு ரூ.75 லட்சம் பரிசு கிடைத்ததும் வியப்படைந்தார்.

ஆனாலும், பரிசுப் பணத்தைத் தம்மிடமிருந்து எவரேனும் பறித்துக்கொள்ளக்கூடும் என்று பதேஷ் அஞ்சினார். அதனால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மூவாட்டுப்புழா காவல் நிலையத்திற்கு விரைந்த அவர், பரிசுப் பணத்தைப் பாதுகாத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

பரிசுப் பணத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளை பதேஷ் அறிந்திருக்கவில்லை. அதனைப் பற்றி அவருக்கு விவரமாக எடுத்துக் கூறிய காவல்துறையினர், தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் தருவதாக உறுதியளித்தனர்.

எர்ணாகுளத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் அந்த அதிர்ஷ்டச் சீட்டை வாங்கினார்.

பரிசுத்தொகை கிடைத்ததும் மேற்கு வங்கம் திரும்ப முடிவுசெய்துள்ளார் பதேஷ். அங்கு சென்றபின் தமது வீட்டைப் புதுப்பிக்கவும் விவசாயத்தை விரிவுபடுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.