சிகாகோ: சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது இந்தியாவைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் கே.வி.சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறந்த தொழில்முறைச் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
கடந்த 2018 முதல் 2021 வரை இந்திய அரசின் 17வது தலைமைப் பொருளியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்தார் சுப்பிரமணியன்.
மேலும், அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இந்திய அரசுப் பணியில் இருந்தபோது மூன்று பொருளியல் ஆய்வறிக்கைகளைத் தயாரித்துள்ள கே.வி. சுப்பிரமணியன், தற்போது ஹைதராபாத்தில் உள்ள பொருளியல் கழகத்தில் நீதித்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சிகாகோ பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்களுக்குக் கடந்த 85 ஆண்டுகளாகத் தொழில்முறைச் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதற்கு முன்பு இந்தியர்கள் யாரும் இவ்விருதைப் பெற்றதில்லை.
நோபெல் பரிசு பெற்ற 14 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்தியாவில் இருந்தபடி நாட்டுக்காகச் செய்த பணிக்கு இந்த விருது அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளதாகவும் கே.வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


