கன்னடர், தமிழர் ஒற்றுமைக்குக் குரல் கொடுத்த எடியூரப்பா

கன்னடர், தமிழர் ஒற்றுமைக்குக் குரல் கொடுத்த எடியூரப்பா

2 mins read
ade47feb-50dc-438d-9a06-e9ccfa0b9605
கர்நாடக கன்னடர்-தமிழர் ஒற்றுமை, கலாசார மாநாடு இரு மொழி பேசும் மக்களை இணைக்கும் வகையில் பெங்களூரில் அக்டோபர் 20ஆம் நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூர்: கன்னட மக்களும் தமிழர்களும் கர்நாடகா மாநிலத்தில் ஒற்றுமையாக வாழவேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற கன்னடர்- தமிழர் ஒற்றுமை மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இங்குள்ள தமிழர்கள் பாடுபட்டுள்ளனர். கன்னடர்களும் தமிழர்களும் ஒரு தாய் மக்கள். அடிப்படையில் இருவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களான இருவரிடத்திலும் எந்த வேறுபாடும் இல்லை. கர்நாடகாவில் கன்னடரும் தமிழரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கூறினார்.

தமது ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் கன்னடர்- தமிழர் இடையே ஒற்றுமை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

பெங்களூருவில் நடந்த மாநாட்டில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தமிழக அரசு, வெளிமாநிலத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 5% இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு உருவாக்கியுள்ள அயலக தமிழர் நலத் துறையின் கிளையை பெங்களூருவில் தொடங்கவேண்டும். கர்நாடகாவில் பிறமொழி சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகைகள் தமிழர்களுக்கும் வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பெங்களூருவிலுள்ள பல்வேறு கன்னட, தமிழர் அமைப்புகள் இணைந்து பங்கேற்ற கன்னடர்- தமிழர் ஒற்றுமை கலாசார மாநாடு பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கர்நாடகா தாய்மொழிக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்டி குமார் தலைமை வகித்தார்.

குறிப்புச் சொற்கள்