புதுடெல்லி: நாட்டின் 10 முக்கிய நகரங்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில், பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே (12.9 வயது) புகை, மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவது தெரியவந்துள்ளது.
பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 5,920 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 15.1 விழுக்காட்டு மாணவர்கள், புகை, மது அல்லது போதைப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
8ஆம் வகுப்பு மாணவர்களைவிட, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் இப்பழக்கம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
புகையிலைப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பதாக 46.3 விழுக்காட்டு மாணவர்களும், மது கிடைப்பதாக 36.5 விழுக்காட்டு மாணவர்களும், கஞ்சா கிடைப்பதாக 16.1 விழுக்காட்டு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 விழுக்காட்டு மாணவர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவர் புகைப்பிடிப்பவராகவோ அல்லது மது அருந்துபவராகவோ இருப்பதாகக் கூறியுள்ளனர். குடும்பச் சூழலும் மாணவர்கள் போதைப் புழக்கத்திற்குச் செல்ல முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

