புதுடெல்லி: இந்தியக் கடலோரக் காவற்படையினர் அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்த படகிலிருந்து 200 பெட்டிகளில் இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். 200 பெட்டிகளிலும் மொத்தம் ஒரு லட்சம் பாக்கெட் சிகரெட்டுகள் இருந்தன.
அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் என்று இந்தியக் கடலோரக் காவற்படை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்தது. அனைத்துலகச் சந்தையில் அந்த சிகரெட்டுகளின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதாக அது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
சனிக்கிழமை குஜராத்தின் துவாரகா கடற்கரைக்கு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகை இடைமறித்து அதிகாரிகள் சோதித்தனர்.
அல் முக்தார் எனப் பெயரிடப்பட்ட அந்தப் படகில் ஈரானைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் இருந்ததாகக் கூறப்பட்டது.
கூடுதல் விசாரணைக்காக அந்தப் படகு போர்பந்தருக்கு இட்டுச்செல்லப்பட்டது. பாதுகாப்பு அமைப்புகள் படகின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.
முன்னதாக, பிப்ரவரி 16ஆம் தேதி இந்தியக் கடலோரக் காவற்படையும் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், குஜராத் கரையருகே ஈரானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோ எடையுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

