திருப்பத்தூர்: கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள அதிசயச் சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ருக்மணி, 56.
இவர் 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி வேலைக்குச் சென்று வாழ்வாதாரம் வருகிறார்.
தாம் வேலை செய்ததற்கான கூலிப் பணத்தை எடுப்பதற்காக புதன்கிழமை (ஜூலை 29) சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு ருக்மணி சென்றார்.
ஆனால், இவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.
வங்கி ஊழியர்களிடம் என்ன செய்வதென்று இவர் கேட்டார்.
“நீங்கள் ஆர்எம் டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும் அதன்மூலம் ஜிஎஸ்டி செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிக வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது,” என்று அவர்கள் கூறினர்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் ருக்மணியிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த ருக்மணி, தாம் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்று சொன்னார்.
நூறு நாள் வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் இவர் விளக்கினார்.
ஆனால், வங்கி ஊழியர்களால் இவருக்கு உதவ இயலவில்லை.
எனவே, கூலிப் பணத்தை எடுக்க முடியாமல் ருக்மணி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவத்தால் வங்கியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.


