ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை: மோடி

ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை: மோடி

2 mins read
3da9ef33-9312-4407-98b0-5b88909b265d
ரோஜ்கர் மோளா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 71,000க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை காணொளி வாயிலாக வழங்கினார் மோடி. - கோப்புப் படம்: இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளையர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.

ரோஜ்கர் மோளா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 71,000க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை காணொளி வாயிலாக வழங்கிய மோடி, “இது ஒரு சாதனை,” என்றார்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சுகள், துறைகளில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், பணியமர்த்தப்பட்டவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் கூறினார்.

“பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசின் முடிவு, அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது. மேலும், 30 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது, அவர்கள் அரசாங்கத் திட்டங்களிலிருந்து நேரடியாகப் பயனடைவதை உறுதி செய்துள்ளது,” என்றார் அவர்.

புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப நவீன கல்வி முறை அவசியம். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் நாடு இப்போது அந்த திசையில் நகர்ந்துள்ளது.

இந்திய இளைஞர்களின் திறன்களையும், திறமையையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே தனது அரசின் முன்னுரிமை. டிஜிட்டல் இந்தியா அல்லது விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று மோடி குறிப்பிட்டார்.

தாய்மொழிப் பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இளையர்களுக்கு ஆள்சேர்ப்புத் தேர்வுகள் 13 இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. மொழி ஒரு தடையாக இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது என்றும் மோடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்