தலைமுறை தலைமுறையாகத் தொடரும் நம்பிக்கை

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் நம்பிக்கை

3 mins read
0ddabd63-acad-4da0-9aae-5e0ba375168d
பக்திப் பரவசத்தில் காவடி, ரதத்துடன் முருகனை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் - படம்: லாவண்யா வீரராகவன்
Google News Preferred Icon

தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பல வேண்டுதல்களுக்காகவும் நன்றிக் கடனாகவும் காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, ரதம் சுமப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.

சிலர் தலைமுறை தலைமுறையாகக் காவடி எடுக்கின்றனர். சிலர் சிறு வயதிலிருந்தே தைப்பூசத் திருவிழாவைப் பார்த்ததால் ஈர்ப்பு ஏற்பட்டு காவடி எடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு முதன்முறையாக அலகு குத்தி, பறவைக் காவடி எடுத்த புக்கிட் பாத்தோக் பகுதியைச் சேர்ந்த நவீந்திரன், 32.

“சிறு வயதிலிருந்தே இந்தத் திருவிழாவைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு காவடி எடுக்க ஆசைப்பட்டேன். எனக்கு சிறு ஊசியைப் பார்த்தாலே பயம் ஏற்படும். ஆனால் முருகன் மீது பாரத்தைப் போட்டு துணிந்து காவடி எடுத்தேன். என்னை மறந்து நான் காவடி சுமந்து ஆடினேன். எனக்கு எந்த வேண்டுதல்களும் இல்லை. எனக்கு நல்வாழ்வளித்திருக்கும் முருகனுக்கு என் நன்றிதான் இது,” என்றார்.

திரு நவீந்திரன்
திரு நவீந்திரன் - படம்: லாவண்யா வீரராகவன்

பாச்சா காபி நிறுவனத்தில் பணிபுரியும் ஃபெர்ன்வேல் பகுதியில் வசிக்கும் மகேந்திரன், 45, பத்தாண்டுகளாகக் காவடி எடுக்கிறார்.

“எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து எடுப்பது வழக்கம். 17 வயதில் முதன்முதலில் பால்காவடி எடுக்கத் தொடங்கி, தற்போது அலகு காவடி எடுக்கிறேன். என்னைத் தொடர்ந்து எனக்கு அடுத்த தலைமுறையினரும் காவடி எடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

தலைமுறைகளாகத் தொடரும் என்ற நம்பிக்கையில் மகேந்திரன்.
தலைமுறைகளாகத் தொடரும் என்ற நம்பிக்கையில் மகேந்திரன். - படம்: லாவண்யா வீரராகவன்

“முதன்முறையாக காவடி தூக்கிய 32 வயது ஆனந்த செல்வம், என் நண்பர்கள், உறவினர்கள் இணைந்து ஒரு மாதமாகக் காவடி கட்டினோம். காவடி எடுக்க மனதளவில் தயாராக எனக்கு இரு வாரங்கள் தேவைப்பட்டன. இதனை நல்லபடியாக முருகனிடம் சென்று சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது,” என்றார்.

மகளுடன் பக்தர் ஆனந்த செல்வம்.
மகளுடன் பக்தர் ஆனந்த செல்வம். - படம்: ச ஐஸ்வரியா

மூன்று வயதிலிருந்து தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்ளும் செம்பவாங் பகுதியைச் சேர்ந்த 27 வயது பூமிநாதன் வேண்டுதல் நிறைவேறியதால் இந்த ஆண்டு ரதக் காவடி எடுத்தார்.  

ரதம் இழுத்த பக்தர் பூமிநாதன்.
ரதம் இழுத்த பக்தர் பூமிநாதன். - படம்: ச ஐஸ்வரியா

பொத்தோங் பாசிர் வட்டாரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரவிச்சந்திரன் நேரு, 59, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக காவடி எடுத்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை காவடி எடுத்த அவர், பின்னர் பெருந்தொற்றினால் எடுக்கவில்லை. இந்த ஆண்டு தாயாருக்காகவும் மகளுக்காகவும் காவடி எடுத்தார்.

பள்ளி சென்றதால் தன் மகள் இவ்விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என வருந்திய இவர், உதவிக்காக தன் நண்பர்கள் வந்ததாகச் சொன்னார்.

பக்தர் ரவிச்சந்திரன் நேரு.
பக்தர் ரவிச்சந்திரன் நேரு. - படம்: ச ஐஸ்வரியா

பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் அங் மோ கியோவைச் சேர்ந்த 50 வயது நந்தகுமார், கடைசியாக 2013ல் காவடி எடுத்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் ரதம் இழுத்த அனுபவம் மாறுபட்டதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பக்தர் நந்தகுமார்.
பக்தர் நந்தகுமார். - படம்: ச ஐஸ்வரியா

இரண்டாம் ஆண்டாக காவடி சுமந்த சுரேந்திரனின் மனைவி ஜோய் மகேஸ்வரி, “சுரேந்திரனின் குடும்பத்தார் பல தலைமுறைகளாகக் காவடி எடுக்கும் வழக்கம் கொண்டவர்கள். நாங்கள் தைப்பூச விழாவிற்கு அதிகம் வந்ததில்லை. கடந்த ஆண்டு காலஞ்சென்ற அவரது தந்தையே காவடி எடுக்க சொன்னது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போதிலிருந்து என் கணவர் காவடி எடுத்து வருகிறார்,” என்றார்.

தங்கள் குழந்தையுடன் சுரேந்திரன், ஜோய் மகேஸ்வரி.
தங்கள் குழந்தையுடன் சுரேந்திரன், ஜோய் மகேஸ்வரி. - படம்: லாவண்யா வீரராகவன்

இவர்களுக்கு ஈராண்டுகளாக உதவிவருகிறார் 35 வயது முகம்மது ரஃபி.

“என்னைப் பொறுத்தவரை எல்லா நம்பிக்கையும் ஒன்றுதான். சமயம் என்பதைத் தாண்டி, நண்பனின் நம்பிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். என்னை நம்பி உதவிக்கு அழைத்த நண்பர் குடும்பத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வதில் மகிழ்ச்சி,” என்றார்.

“தைப்பூசத் திருவிழா சமய நம்பிக்கை என்பதைத் தாண்டி, சிங்கப்பூரின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதனைப் பலர் பின்பற்றுவதைப் பார்ப்பதிலும் தனி மகிழ்ச்சி,” என்றும் குறிப்பிட்டார் திரு ரஃபி.

காவடி எடுத்த தன் நண்பருக்கு உதவிய முகம்மது ரஃபி.
காவடி எடுத்த தன் நண்பருக்கு உதவிய முகம்மது ரஃபி. - படம்: லாவண்யா வீரராகவன்

நெற்றியில் வேல் குத்தி பால்குடம் சுமந்த 71 வயது காந்திமதி, நினைவு தெரிந்த நாளிலிருந்து பால்குடம் எடுத்து வருகிறார். இப்படிச் செய்தால் முருகன் தன்னிடம் அன்பாக இருப்பார் என்பது அவரது நம்பிக்கை.

71 வயதான பக்தர் காந்திமதி.
71 வயதான பக்தர் காந்திமதி. - படம்: ச ஐஸ்வரியா
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்