உழைப்பும் கவனமும் மதிப்புபெறும்!

உழைப்பும் கவனமும் மதிப்புபெறும்!

2 mins read
7bc5c056-e6e5-404b-a0fe-72f693cc3b3f
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக எரிபொருள் ஆய்வு நிலையத்தின் நிர்வாக அதிகாரி மாதவி ஸ்ரீனிவாசன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பயன்தரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியல் வல்லுநர்களுக்கு மனித இனத்தின் மீதான பரிவே உந்துதல்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகப் பணியாற்றும் மாதவி ஸ்ரீனிவாசன், இத்தகைய உந்துதலால்தான் சோதனைகள் பலவற்றைக் கடந்துவந்தார்.

சென்னையின் அடையாறு நகரில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் மாதவி, முதுநிலைக் கல்வியை சென்னை ஐஐடியில் முடித்தார்.

பேராசிரியர் மாதவி, முனைவர் படிப்புக்காகக் கல்விமான் விருதுடன் சிங்கப்பூருக்கு வந்தார். இப்போது சிங்கப்பூரில் தம் கணவருடனும் 16 வயது மகனுடனும் அவர் வசித்து வருகிறார்.

உலக இளம் அறிவியல் வல்லுநர்களுக்கான உச்சநிலைச் சந்திப்பில் இவ்வாண்டு பங்கேற்கும் 350க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். ஜனவரி 8ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த மாநாட்டிற்காக உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்த உரைகளிலும் சந்திப்புகளிலும் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வுடன், பல்கலைக்கழகத்தின் நிலைத்தன்மைத் துறையையும் பேராசிரியர் மாதவி நிர்வகித்தார்.

தற்போது ஆற்றல் உருமாற்றங்களை ஆராயும் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுக்கழக நிர்வாக இயக்குநராக இவர் செயல்பட்டு வருகிறார். இங்கு 180 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மனிதச் சமூகத்தில் ஏதேனும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த அறிவியல் நல்ல வழியாக இருக்கும் என்று சிறுவயது முதலே தாம் நினைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அத்துடன், மாணவர்களுக்குக் கற்பித்து, அவர்களுக்கு நல்வழிகாட்டும் எண்ணத்துடன் அவர் பேராசிரியராகச் சேர்ந்தார்.

தினமும் நீண்ட வேலை நாள் என்றாலும் ஒன்றை விரும்பிச் செய்யும்போது நேரத்தைக் கணக்கிடுவதில்லை என்கிறார் பேராசிரியர் மாதவி.

“ஆய்வுலகத்தில் முடிவு என்பது அதன் தொடக்கத்தில் தெரியாததால் மீள்திறன் தேவைப்படுகிறது. மனிதகுலத்திற்கு அறிவியல் ஆய்வுகள் பயன்தருவதால் இடையிடையே ஏற்படும் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடரவேண்டும்,” என்று இவர் கூறினார்.

பிடிக்காத வேலையை அல்லது துறையை மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்கிறார் இவர்.

“ஆனால், நீங்கள் இப்போது செய்யும் எந்தச் செயலையும் முழுமனத்துடன், முழுமுயற்சியுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்யப்படும் வேலையின் தரம் நன்றாக இருக்கும்; ஆர்வமும் பெருகும் என்பதே என் அறிவுரை,” என்றார் பேராசிரியர் மாதவி.

யோகாசனம், ஸூம்பா, மெதுநடை நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபடும் இவர், பஞ்சரத்ன கீர்த்தனைகள் வரை கர்நாடக சங்கீதத்தைக் கற்றுள்ள இசை விரும்பி. வெற்றிதோல்வி பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து வேலையில் அக்கறையுடன் ஈடுபட முடிவதற்காக இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக இவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்
அறிவியல்விஞ்ஞானிகள்