‘தமிழ் வெல்லும்’: சிங்கப்பூர்த் தமிழர்களின் தமிழ்ப்பயணம்

‘தமிழ் வெல்லும்’: சிங்கப்பூர்த் தமிழர்களின் தமிழ்ப்பயணம்

3 mins read
5329a4cb-b2a0-4b3e-8a3f-eb6219e5c0ff
‘தமிழ் வெல்லும்’ எனும் கருவில், மூன்றாம் ஆண்டு அயலகத் தமிழர் தின மாநாடு ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் சென்னையில் சிங்கப்பூர்த் தமிழ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. - படம்: தமிழக அரசு
Google News Preferred Icon

அயலகத் தமிழர் தின மாநாடு

ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில். தமிழக அரசின் மூன்றாம் ஆண்டு அயலகத் தமிழர் தின மாநாடு, ‘தமிழ் வெல்லும்’ எனும் கருவில் நடைபெறவுள்ளது.

அதற்காக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து, 16 உயர்கல்வி மாணவர்கள் உள்ளடங்கிய 128 தமிழ் ஆர்வலர்கள் சென்னைக்குச் செல்கின்றனர்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் கே. ராமமூர்த்தி, அதன் ஆலோசகர் ப. திருநாவுக்கரசு, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், தமிழர் பேரவை தலைவர் வெ. பாண்டியன், கவிமாலை ஆலோசகர் மா.அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ரவீந்திரன் முதலானோர் கலந்துகொள்வர்.

இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ஆர். ராஜாராம், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் ஆகியோர் மாநாட்டில் உரையாற்றுவர். தமிழ் அமைப்புத் தலைவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைப்பர்.

“இம்மாநாடு உலகத் தமிழர்களை இணைக்கக்கூடிய பாலம். நாடுகளுக்கிடையே தமிழ் வளர்ச்சிக்கு நடைபெறும் சிறந்த திட்டங்களின் பகிர்வுக்குத் துணைபுரியும்,” என்றார் அதில் பங்கேற்கும் கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா. புதிய பன்னாட்டுக் கூட்டுமுயற்சிகளுக்கும் இது துணைபுரியும் என அவர் எதிர்பார்க்கிறார்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் திரு தனபால் குமார் அயலகத் தமிழ்க்கல்வி என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.

தம் உரையில் சிங்கப்பூரின் இருமொழிக் கல்வி, நமது தாய்மொழிகளைவாழும் மொழிகளாக வைத்திருப்பதில் நாம் காட்டும் முனைப்பு, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் சமூகத்தின் ஈடுபாடு, அரசாங்க ஆதரவு மற்றும் தமிழாசிரியர் சங்கம் 1992ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடுகளை வெவ்வேறு நாடுகளில் நடத்துவதன்வழி உலக நாடுகளில் தமிழ்க் கல்விக்குப் பங்களித்து வருவது குறித்தும் பேசவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பான முதலீட்டு ஆலோசனைகள், தமிழ் வரலாற்றுச் சிறப்புமிக்க இடச் சுற்றுலாக்கள், நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சிகள் என பல அங்கங்களும் இடம்பெறும்.

அயலகத் தமிழர்கள் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கான கட்டமைப்புகளை வலுவாக்க, ‘எனது கிராமம்’ என்ற திட்டமும் இம்மாநாட்டில் தொடங்கப்படும்.

பத்தாவது உலகத் தமிழ் வர்த்தக மாநாடு

ஜனவரி 9,10ஆம் தேதிகளில் சென்னையிலேயே பத்தாவது உலகத் தமிழர் வர்த்தக மாநாடும் நடைபெறும்.

அரசாங்கப் பிரதிநிதிகள், அமைச்சர்கள், உலகத் தலைவர்கள், தொழில்முனைவர்கள் முதலியோர் கலந்துகொள்வார்கள்.

அதில் ‘கோபியோ சிங்கப்பூர்’ எனப்படும் சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கான அனைத்துலக அமைப்பின் தலைவராக பங்குபெறும் திரு மு. ஹரிகிருஷ்ணன், ‘உலகத் தமிழ் மாமணி’ விருதைப் பெறுவார்.

‘பெண்களின் ஆளுமை’ எனும் தலைப்பில் திரு ஹரிகிருஷ்ணன், பெண்களின் முன்னேற்றத்திற்கு பாரதியாரும் பெரியாரும் அன்று கண்ட கனவை இன்று எவ்வாறு மென்மேலும் நனவாக்குவது என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

கல்வி, தொழில்முனைப்பு, வர்த்தகம், முதலானவற்றில் பெண்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துவதைப் பற்றிய அவரது ஆலோசனைகள் உரையில் இடம்பெறும்.

சென்னையில் நூல் வெளியீடு

ஜனவரி 13ஆம் தேதி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ எனும் கவிதை நூல், கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தலைமையில் வெளியீடு காண்கிறது.

அதைத் தொடர்ந்து திணைகள் கவிதை விருது, ‘கழுமரம்’ என்ற கவிதை நூலுக்கு வழங்கப்படவுள்ளது.

சென்னையில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சிக்கும் சென்று அதை சிங்கப்பூருக்குக் கொண்டுவரலாமா என்றும் ஆராயவுள்ளனர் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்.

குறிப்புச் சொற்கள்