பிள்ளைகளுக்கான 10 தாய்மொழிப் புத்தகங்கள் வெளியீடு

பிள்ளைகளுக்கான 10 தாய்மொழிப் புத்தகங்கள் வெளியீடு

2 mins read
9ed1b86a-8d1c-48de-9c02-64371c5953be
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக 9 முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளுக்கான 10 தாய்மொழிப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. - படம்: மோனலிசா
Google News Preferred Icon

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக ஒன்பது முதல் பன்னிரண்டு வயது வரையிலான பிள்ளைகளுக்கான 10 தாய்மொழிப் புத்தகங்கள் அண்மையில் வெளியீடு கண்டன. 

பிள்ளைகள் மத்தியில் தாய்மொழிப் புழக்கத்தைத் தூண்டும் வகையில் தேசிய கலைமன்றத்தின் ‘பியான்ட் வோர்ட்ஸ்’ (Beyond Words) திட்டத்தின் ஆதரவுடன் மூன்று தமிழ்ப் புத்தகங்கள், மூன்று சீன மொழிப் புத்தகங்கள் ஆகியவற்றுடன் நான்கு மலாய் மொழிப் புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

இவற்றுள் தமிழ் மொழியில் ஜான்சிராணி தனபால் எழுதிய ‘டிராகனைத் தேடி’, கவிதா ராமசாமியின் ‘அகிவா’, உமையாளம்பிகை ராமகிருஷ்ணனின் ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’ ஆகிய புத்தகங்கள் இடம்பெற்றன. 

அனைத்துப் புத்தகங்களின் ஆசிரியர்களுமே ‘பியான்ட் வோர்ட்ஸ்’ திட்டத்தின் பயிலரங்கில் பங்குகொண்டவர்கள். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் எழுத்து நுணுக்கங்களும் அனுபவமிக்க எழுத்தாளர்களின் வழிகாட்டுதலும்  இடம்பெற்றன. 

நவம்பர் 26ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தியில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அவர் தமது உரையில், “அதிக அளவிலான சிங்கப்பூரர்கள் எழுதிய தாய்மொழிப் புத்தகங்கள் நடுத்தர வயதுப் பிள்ளைகளுக்குத் தேவை. பெரும்பாலான வீடுகளில் ஆங்கிலப் புழக்கம் அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற புத்தகங்கள் தாய்மொழிப் புழக்கத்தை வலுவடையச் செய்யும். மேலும் நம் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அவை நமது பிள்ளைகளிடத்தில் கொண்டுசெல்லும்,” என்று கூறினார். 

ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜான்சிராணி தனபால், 60, தம்முடைய ‘டிராகனைத் தேடி’  புத்தகத்தை உருவாக்க ‘பியான்ட் வோர்ட்ஸ்’ பயிலரங்கு மிகவும் உதவியாக இருந்தது என்றார்.

‘அகிவா’வை எழுதிய ஆசிரியர் கவிதா ராமசாமியின் முதல் புத்தகம் இது. 44 வயதாகும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றுகிறார். பிள்ளைகளுக்கு வாழ்வியல் விழுமியங்களை கதைவழி கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.    

தமிழாசிரியரான உமையாளம்பிகை ராமகிருஷ்ணன், 44, ஒரு நாடகக் கலைஞரும் ஆவார். வாசகர்களைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள ‘பியான்ட் வோர்ட்ஸ்’ பயிலரங்கு நன்கு பலனளித்தது என்றும் தொடர்ந்து தமிழ் மொழியை பிள்ளைகளிடம் எளிமையான முறையில் கதைவழி கொண்டுசெல்லும் பல புத்தகங்களை எழுத விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழ்ப் புத்தகங்களை கிரிம்சன் எர்த் நிறுவனம் வெளியிட்டது. சீனமொழிப் புத்தகங்களை சிட்டி புக் ரூம், ரைட்டர்ஸ் பிரஸ் ஆகிய இரு நிறுவனங்களும் மலாய்ப் புத்தகங்களை புஸ்தக நேஷனல் நிறுவனமும் வெளியிட்டுள்ளன. புத்தகங்கள் அனைத்தும் மின்னிலக்க வடிவத்திலும் சில புத்தகங்கள் குரல்பதிவாகவும் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்