இல்லங்களில் தமிழ் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இல்லங்களில் தமிழ் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

2 mins read
7f15d9d4-112b-4556-bff3-117fa6cd110a
நல்லாசிரியர் விருதைத் தொடக்கப்பள்ளிப் பிரிவில் பெற்ற திருவாட்டி பு.கயல்விழி, 41. - படம்: பே.கார்த்திகேயன்
Google News Preferred Icon

ஜங்ட தொடக்கப்பள்ளியில் 18 ஆண்டுகளாகக் கற்பிக்கும் மூத்த ஆசிரியர் திருவாட்டி பு.கயல்விழி, 41, இவ்வாண்டு சிறந்த நல்லாசிரியர் விருதைத் தொடக்கப்பள்ளிப் பிரிவின்கீழ் பெற்றுள்ளார். 

தமிழ் பேசும் சூழலில் வளர்ந்த திருவாட்டி கயல்விழிக்கு அவரின் தாய், தந்தையர் திருக்குறளையும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும் அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாளும் வாசிக்க வைப்பார்கள். அத்துடன் அவருக்குக் கற்பித்த ஒவ்வொரு தமிழ் ஆசிரியரும் சுவையான, மாறுபட்ட முறையில் பாடம் நடத்தியதன் மூலமாகவும் திருவாட்டி கயல்விழியின் தமிழ் ஆர்வம் தட்டி எழுப்பப்பட்டது. 

கற்றலைச் சுவையாக்க திருவாட்டி கயல் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகிறார். ‘பவ்டூன்’ என்ற உயிரோவிய மென்பொருளைப் பயன்படுத்தி தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை இந்த ஆசிரியர் வளர்க்கிறார். ‘ஸ்னெப்’, ‘டாங்கி’, ‘ஹெப்பி ஃபேமலி’ போன்ற விளையாட்டுகளையும் அவர் பயன்படுத்தி மாணவர்களின் மொழித்திறன்களையும் புரிதலையும் ஆழப்படுத்துகிறார்.

மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களையும் கற்றலில் ஈடுபடுத்த விரும்புவதாகக் கூறும் கயல்விழி, பெற்றோர்களுடனும் மாணவர்கள் அதிகம் தமிழில் பேசுவேண்டும் என்பதை விரும்புகிறோர். 

“ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற  பழமொழிக்கு ஏற்ப, பிள்ளைகளுக்குத் தமிழின் மீது ஆர்வத்தை வளர்க்க பெற்றோர், ஆசிரியர் எனப் பலரும் அவர்களுக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் தமிழில் பேசுவர். மேலும், அவர்கள் தமிழில் பேசுவதற்கு நல்ல வீட்டுச்சூழல் தேவைப்படுகிறது. வகுப்பறையில் மட்டும் தமிழ் பேசுவது போதாது, வீட்டிலும் பேசவேண்டும். அந்த வாய்ப்பைப் பெற்றோர்கள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதைத் தாழ்மையுடன் வேண்டி கேட்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இவ்வாறு கூறும் அவர், தமது இரண்டு மகன்களையும் வீட்டில் தமிழில் பேசச் சிறுவயதிலிருந்தே ஊக்குவித்து வருகிறார். மாணவர்களைத் தமிழ் புத்தகங்களை வாசிக்கப் பெற்றோர் வீட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். வாசிக்கும் பழக்கம் மொழிக் கற்றலுக்கு மிக முக்கியமான ஒன்று என்றும் இவர் நம்புகிறார்.

விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ள திருவாட்டி கயல்விழி, தைரியமாகத் திட்டமிட ஊக்குவிக்கும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் தன்னுடன் சேர்ந்து பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கும், கற்றலில் ஆர்வம் காட்டி ஊக்கம் தந்த மாணவர்களுக்கும் ஆதரவு தந்த பெற்றோருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்