‘மாவீரர்’ தனிநபர் நடிப்பின் கதைச் சிறப்பு

‘மாவீரர்’ தனிநபர் நடிப்பின் கதைச் சிறப்பு

2 mins read
7d516622-2af1-40ee-95ed-b85504de1d6f
ஆண்மகன்களின் அங்கீகரிக்கப்படாத சவால்களை எடுத்துக்காட்டிய ‘கக்கூஸ்’ நாடகத்தின் கதாநாயகன் ஷாஃபி பாடா ஜபாரி. - படம்: பிளாக்ஸ்பைஸ் மீடியா
multi-img1 of 2

பிளாக்ஸ்பைஸ் மீடியாவின் தயாரிப்பில் தனிநபர் நடிப்பில் படைக்கப்படும் நாடகத் தொடரின் மூன்றாவது பாகம் மார்ச் 26 முதல் 28ஆம் தேதிவரை நடைபெற்றது.

கடந்த 2021ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவல் காலத்தின்போது ஒரே மேடையில் பலர் சேர்ந்து நடிக்க முடியாத காரணத்தால், தனிநபர் நாடகத் தொடர் அறிமுகம் கண்டது.

இத்தொடரின் மூன்றாவது பாகத்தில் ‘மாவீரர்’ எனும் கருப்பொருளின் அடிப்படையில் நான்கு கதைகள் மேடையேற்றப்பட்டன. இரண்டு தமிழிலும் இரண்டு ஆங்கிலத்திலும் இடம்பெற்றன.

சாதாரண மனிதர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த நாடகங்களில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மாவீரர் என்பதை உணர்த்தும் வகையில் படைப்பு உருவாக்கப்பட்டது.

யோகேஸ் தாட்வால்கர் எழுதிய ‘மெஸ்-ஐயா’ (‘Mess”iah) கதை அரக்கர்கள் என்று நம்புவோர் உண்மையில் அரக்கர்களா என சிந்திக்க வைத்தது.. 

கலைவாணி இளங்கோ எழுதிய ‘கக்கூஸ்’ என்ற கதை மனவுளைச்சலைப் பிறரிடம் தெரிவிக்காமல் கழிவறைக்குள் மறைவாக வெளிப்படுத்தும் ஆணின் கதை.

சேவைத் துறையில் பணிபுரியும் பெண்களின் அங்கீகரிக்கப்படாத பங்களிப்புகளை வெளிப்படுத்தும் கதை, மெலிசாராணி டி. செல்வா எழுதிய ‘த சிங்கப்பூர் கேர்ள்’.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வைச் சித்திரிக்கும் “மாயக்காரி” என்ற கதையை எழுதியிருந்தார் சூர்யரத்னா. 

‘ஒரு நாடகத்தின் உணர்வுகள் உலகளாவியவை. இருமொழி கொண்ட நாடகங்களை நடத்துவதன்வழி, தமிழ்ப் படைப்பு பல்வேறு மக்களிடம் கொண்டுசேர்க்கப்படுகிறது,” என்று கூறினார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான சலீம் ஹாடி.

“நாடகத்தில் முக்கியமானது கருத்து அல்ல, அது எவ்வாறு சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்,” என்று குறிப்பிட்டார் ‘கக்கூஸ்’ என்ற தமிழ் நாடகத்தை இயக்கிய  மலாய் இயக்குநர் நூர் எஃபெண்டி இப்ராஹிம்.

“எத்துறையில் பணிபுரிபவராக இருப்பினும் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை இந்த நாடகம் உணர்த்துகிறது,” என்று கூறினார் ‘த சிங்கப்பூர் கேர்ள்’ நாடகத்தில் நடித்த ஜோயன்னா ஃபிரான்சுவா.

குறிப்புச் சொற்கள்