திருத்துறைப்பூண்டி நன்னூல் பதிப்பகம் சார்பில் மணலி அப்துல்காதர் தொகுத்த ‘கால் நூற்றாண்டுகால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’ இரண்டு தொகுப்புகளில் வெளியிடப்பட்டது.
இத்தொகுப்பில் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்த இந்தத் தொகுப்பின் வெளியீட்டு விழா கடையநல்லூரில் நடைபெற்றது.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முஹம்மது பிலால் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். ‘சிங்கப்பூர் பேசும் கலை வளர்ப்போம்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு பிலாலுக்கு விருது வழங்கப்பட்டது.
கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகமும், நன்னூல் பதிப்பகமும் சேர்ந்து ‘பேசும் கலை இயக்கப்புரவலர்’ என்ற விருதையும் பாராட்டையும் அவருக்கு வழங்கிச் சிறப்பித்தன.
இன்றைக்கு உலக முஸ்லிம்களின் படைப்பிலக்கியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்களின் கதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பில் கதைகள் எழுதியுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஒன்பது எழுத்தாளர்களின் கதைகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களத்தில் தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டிருப்பது சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த சிறப்பு என நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கல்வியாளர் எல் கே எஸ் மீரான் மைதீன் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புப் பேச்சாளர் நாவலாசிரியர் நாகர்கோவில் மீரான் மைதீன் தற்கால சிறுகதைகள், நாவல்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் சேயன் இப்ராகிம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நூல் தொகுப்பாசிரியர் மணலி அப்துல்காதர் ஏற்புரை நிகழ்த்தினார்.

