வரும் பிப்ரவரி 22ஆம் தேதி குடமுழுக்கு விழா காணவுள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் வரலாறு சுவாரசியமானது. சிங்கப்பூரின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் 1923ஆம் ஆண்டில் அரசமரத்தடியில் சூல வழிபாட்டில் தொடங்கியது.
எறத்தாழ 80 ஆண்டுகளுக்குமுன், சிங்கப்பூரின் வடக்கு வாசலில், காவல் அரண்போல அமைந்திருந்த இந்தக் கோவில், சிங்கப்பூர், மலேசிய பக்தர்களுக்குப் புனிதமான இடமாகத் திகழ்ந்தது.
அப்போது உட்லண்ட்ஸ் சாலையில் அமைந்திருந்த இக்கோவில் படிப்படியாக உருமாற்றம் கண்டு, 1956இல் பொதுமக்களின் ஆதரவால் பெரிய கோவிலாக எழுப்பப்பட்டது.
மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, 1995ஆம் ஆண்டு தற்போது இயங்கிவரும் சுங்கை காடுட் அவென்யூவுக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 2001ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஏறத்தாழ $8.8 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலின் முதல் குடமுழுக்கு 2005ஆம் ஆண்டில் கோலாகலமாக நடைபெற்றது.
அவ்விழாவில் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவ்விழாவில் மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த குருமார்கள் பங்கேற்று திருக்குடமுழுக்கு விழாவை நடத்தினர். ஓர் அரச மரத்தின் அடியில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த கோவில், தற்போது பல நவீன வசதிகளுடன் கூடிய கோவில் வளாகமாக நிலைபெற்றுள்ளது.
“இந்தக் கோயில் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அமைதியையும் ஆன்மீக ஆறுதலையும் வழங்கும் ஒரு புகலிடமாகத் தொடர்ந்து திகழ்கிறது,” என்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

