ஆர்ஜே பாலாஜியைச் சாடிய திருப்பூர் சுப்பிரமணியம்

ஆர்ஜே பாலாஜியைச் சாடிய திருப்பூர் சுப்பிரமணியம்

1 mins read
3fc2615f-e023-495f-9fdc-9061620b26de
திரையரங்கு உரிமையாளரும் திரைப்பட விநியோகிப்பாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் . - படம்: விகடன்

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

திரையரங்குகளின் வசூல் மூலமாக மட்டும் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளரும் திரைப்பட விநியோகிப்பாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசிய கருத்துகள் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் கூறுகையில், “எந்த ஒரு பெரிய திரைப்படமும் திட்டமிட்டபடி முடிவடைவது கிடையாது. உதாரணமாக ‘கருப்பு’ திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது.

“ஒரு படம் வெளியாகும் முன்பு கடைசி இரண்டு நாள்களில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்

“ஒரு திரைப்படம் வெளியீட்டு நேரத்தில் சிக்கல்களைச் சந்திக்கும்போது, அதில் பணியாற்றிய நடிகர்களோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களோ பெரும்பாலும் உதவிக்கு வருவதில்லை.

“‘கருப்பு’ திரைப்படம் சிக்கலில் இருந்தபோது நடிகர் சூர்யா மட்டுமே நேரடியாக அக்கறை காட்டினார்.

“படம் வெளியாவதற்கு முன்பு காரில் உட்கார்ந்துகொண்டு கவலையால் கண்ணீர் வடிக்கும் இயக்குநர்கள்கூட, படம் வெற்றியடைந்த பிறகு ‘இந்த வெற்றிக்கு நான்தான் காரணம்’ என்று பெருமை பேசத் தொடங்கிவிடுகிறார்கள்.

“ஆனால் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை,” என்று திரு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்