‘பாட்டில் ராதா’ நல்ல திருப்புமுனையைத் தரும்

‘பாட்டில் ராதா’ நல்ல திருப்புமுனையைத் தரும்

3 mins read
0e0d303d-ad93-49c9-9a9c-e20424d8e10f
சஞ்சனா நடராஜன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அண்மையில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா.

12 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தாலும் இன்னும் தனக்கேற்ற வாய்ப்புகள் அமையவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘பாட்டில் ராதா’ என்ற புதுப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

நடிகையாக வேண்டும் என்று தாம் எப்போதுமே கனவு கண்டதில்லை என்றும் சிறு வயதில் தொலைக்காட்சியில் ஏராளமான திரைப்படங்களைப் பார்த்ததால் திரைத்துறை மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது என்றும் ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சஞ்சனா.

“நான், அப்பா, அம்மா என்று குடும்பத்தில் மூன்று பேர்தான் உள்ளோம். சிறு வயதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் என அனைத்தையும் அலசி ஆராய்வேன்.

“நான் கணக்கியல் துறையில் சாதிக்க வேண்டும் என்பது அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆர்வமாக இருந்தது.

“எப்படியோ அப்பாவின் மனதை மாற்றி நான் விரும்பியதை படித்து பட்டமும் பெற்றுவிட்டேன். பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டேன்,” என்கிறார் சஞ்ஜனா நடராஜன்.

’பாட்டில் ராதா’ படம் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்குமாம். பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தை தினகர் இயக்குகிறார்.

தாம் இதற்கு முன்பு ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தை எற்றுள்ளதாகச் சொல்கிறார்.

“நம் வீட்டுக்கு அருகே வசிக்கும் இளம் பெண்ணைப் போன்ற கதாபாத்திரம் அது. இத்தகைய பாத்திரங்களில் இயல்பாக நடித்தால் ரசிகர்கள் மனதில் எளிதில் இடம் கிடைக்கும்.

“‘ஜிகிர்தண்டா’ படத்தில் பழங்குடிப் பெண்ணாக நடித்திருந்தேன். அதே போன்று ‘போர்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புவது பேராசை என்பது எனக்கும் தெரியும். எனினும் அதற்கான எனது முயற்சிகளில் குறை வைத்தது இல்லை,” என்கிறார் சஞ்சனா.

தமிழ் தவிர பிற மொழிகளிலும் நடித்து வரும் இவருக்கு மலையாளத்தில் உருவாகும் ‘டிக்கி டாகா’ என்ற படத்திலும் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். அதில் கதைப்படி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சஞ்சனா இரண்டு சண்டைக்காட்சிகளிலும் இடம் பெற்றுள்ளார்.

“இது அடிதடிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. தெலுங்கில் நடிக்கவும் அழைத்துள்ளனர்.

“நான் அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்வதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. அது உண்மை அல்ல. சினிமாவில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்துவிட்டால் அதே போன்ற வேடங்கள் அமைவது இயல்புதான்.

“எனக்கேற்ற பாத்திரங்களை நான்தான் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரை எனக்கான பணிகளை நூறு விழுக்காடு கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தக் கொள்கைதான் இன்றளவும் எனக்கு கைகொடுக்கிறது.

“ஜிகிர்தண்டா’ படத்தில் பாவப்பட்ட பழங்குடி பெண்ணாக நடித்திருந்தேன். அப்படத்தில் நான் இடம் பெற்ற சில காட்சிகள் நீளம் கருதி நீக்கப்பட்டு விட்டன.

“அக்காட்சிகளைப் பார்த்திருந்தால் சினிமாவுக்காக இந்தப்பெண் எப்படி எல்லாம் தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறாள் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டிருப்பர்.

“காரணம் அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருந்தேன். எனினும், சினிமாவில் எதுவும் நடக்கலாம். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் சில காட்சிகள் நீக்கப்படுகின்றன,” என்கிறார் சஞ்சனா நடராஜன்.

குறிப்புச் சொற்கள்
நடிகை