‘இது பேய்களிடம் சிக்கும் குடும்பத்தின் கதை’

‘இது பேய்களிடம் சிக்கும் குடும்பத்தின் கதை’

3 mins read
96898e21-107e-4653-9dce-d3d9faca7077
ரெஜினா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அறிமுக இயக்குநர் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகிறது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படம்.

முழு நீள கற்பனை, திகில் நிறைந்த படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமான அம்சங்களும் உள்ளடங்கி இருக்கும் என்கிறார் இயக்குநர்.

இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சதீஷ். மேலும் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி.கணேஷ், நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“இதை வெறும் நகைச்சுவைப் படமாகவோ அல்லது திகில் நிறைந்த நகைச்சுவைப் படமென்றோ வகைப்படுத்தலாம். கதை நாயகனும் அவனது குடும்பத்தாரும் பேய்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். அந்தத் தவிப்பில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக் கதை.

“இந்தக் கதையையும் படத்தையும் எந்த திசையில் அல்லது திரைப்படப் பாணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இருக்கவில்லை. எத்தகைய சமரசத்திற்கும் நான் தயார் இல்லை என்பதை உணர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஒத்துழைப்பு தந்ததுதான் எனக்குக் கிடைத்த முதல் மகிழ்ச்சி.

“படத்தின் தரம் குறைந்துவிடக் கூடாது என்பதில் என்னைவிட தயாரிப்பாளர்கள் தெளிவாக இருந்தனர்,” என்கிறார் இயக்குநர் ராஜ் சேவியர்.

இவர் சொன்ன கதை மீது சதீஷுக்கும் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். அனைத்து கதாபாத்திரங்களையும் அரவணைத்துச் செல்லும் அந்தக் கதாபாத்திரத்தை நன்கு புரிந்துகொண்டு நடித்ததாக சதீஷைப் பாராட்டுகிறார்.

செலவுகள் குறித்து கவலைப்படாமல் தாம் கேட்ட அனைத்தையும் எந்தவிதக் குறையுமின்றி தயாரிப்புத் தரப்பு ஏற்பாடு செய்ததாகவும் சொல்கிறார்.

“உண்மையைச் சொல்வதானால் நாங்கள் கணக்கிட்டதைவிட கூடுதலான தொகைதான் செலவானது. படத்தின் பின்னணிக் குரல் பதிவின்போது சரண்யா பொன்வண்ணனால் பல இடங்களில் தம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ‘களவாணி’ படத்திற்குப் பிறகு இப்போதுதான் ‘டப்பிங்’ பணியின்போது வாய்விட்டுச் சிரிக்கிறேன் என்றார் சரண்யா.

“ரெஜினாவுக்கு இதில் துணை விசாரணை அதிகாரி கதாபாத்திரம். அதற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை கொஞ்சம்கூட குறையாமலும் மிகாமலும் வழங்கியுள்ளார். அவர் அனுபவ நடிகை என்பதை ஒவ்வொரு காட்சியின்போதும் உணரச்செய்தார்.

“தயாரிப்பாளர்கள் முழு படத்தையும் பார்த்துவிட்டு மனநிறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ‘சொன்னதை அப்படியே திரையில் கொண்டு வருவது எளிதல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். ஆனால் நீங்கள் சொன்னது அனைத்தையும் அப்படியே காட்சிபடுத்தி இருக்கிறீர்கள்’ என்றும் பாராட்டினர்,” என உற்சாகத்துடன் நடந்ததை விவரிக்கிறார் ராஜ் சேவியர்.

நிஜத்தைவிட அதைப் புனைவு செய்யும் போதுதான் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதை மனதிற்கொண்டு எல்லை மீறாமல் செயல்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்.

இந்தப் படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா. மூன்று அருமையான பாடல்களை கொடுத்துள்ளாராம்.

“இதுபோன்ற திகில் கதைகளுக்கு யுவனின் பின்னணி இசை மாறுபட்ட களப் பரிமாணத்தை அளிக்கும். இந்தப் படத்திலும் அப்பணியைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

“ஒளிப்பதிவாளர் யுவா ஏற்கெனவே ‘லிஃப்ட்’, ‘டெடி’ ஆகிய திகில் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவம் உள்ளவர். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது குறிப்பிட்ட காட்சிகள் இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்கு போட்டு வைத்திருப்பேன். ஆனால் யுவா கூடுதல் சுவாரசியமும் அழகும் இருக்கும்படி ஏதோ ஒரு மாயாஜாலம் (வித்தை) செய்திருப்பார்,” என்கிறார் அறிமுக இயக்குநர் ராஜ்சேவியர்.

ஒரு திகில் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’.

குறிப்புச் சொற்கள்