இமான்: முன்பே சரியாகக் கணித்துவிட்டார் அஜித்

2 mins read
21919587-0ecb-4643-a6ed-4ce5140176ec
படப்பிடிப்புத் தளத்தில் அஜித்துடன் இமான். -

தேசிய விருது பெற்ற மகிழ்ச்சி மன­தில் நிறைந்­தி­ருந்­தா­லும் அது­குறித்து அலட்­டிக்கொள்­ளா­மல் தனக்கே உரிய அமை­தி­யு­ட­னும் பக்­கு­வத்­து­ட­னும் பேசு­கி­றார் இசை­ அமைப்­பா­ளர் டி. இமான்.

'அண்­ணாத்த' படத்­துக்­காக ஏற்­கெ­னவே நான்கு பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்து முடித்த நிலை­யில் மீத­முள்ள பாடல்­களை முடித்­துத் தரு­மாறு இயக்­கு­நர் தரப்­பில் கேட்­டுள்­ள­ன­ராம். அந்­தப் பணி­யில் இப்­போது மூழ்­கி­யுள்­ளார்.

"நல்ல பாடல்­களை உரு­வாக்கு­வ­தற்­கான நேரம் வந்­துள்­ளது. அத்­தகைய பாடல்­க­ளுக்கு நல்ல தளம் அமைத்­துக் கொடுப்­ப­து­தான் என் வேலை.

"முன்பு போல பாடல் காட்­சி­களைத் தவிர்த்­து­விட்டு ரசி­கர்­களை எழுந்­து ­போகவிடக்­கூ­டாது. முந்­தைய காட்­சிக்­கும் பாடல்­க­ளுக்­கும் இடையே ஒரு­வித பிணைப்பை ஏற்­ப­டுத்­தும் பொறுப்­பான வேலை இசை­ய­மைப்­பா­ள­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கிறது. எனவே கவ­ன­மாக இருக்க வேண்­டும்," என்று பொறுப்பு­டன் பேசு­கி­றார் இமான்.

'விஸ்­வா­சம்' படத்­தில் இடம்­பெற்ற 'கண்­ணான கண்ணே' பாடல் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்று நடி­கர் அஜித் தொடக்­கத்­தி­லேயே கூறி­னா­ராம். அவ­ரது கணிப்பு பொய்­யா­க­வில்லை என்று சொல்­லும் இமான், துள்­ளல் இசை, மெல்­லிசை என்று எந்­த­வ­கைப் பாட­லாக இருந்­தா­லும் அது வலு­வா­ன­தாக இருக்­க­வேண்­டும் என்­கி­றார்.

"'மயி­லாஞ்சி', 'ஒங்­கூ­டவே பிறக்­க­ணும்' போன்ற பாடல்­கள் இல­கு­வாக காதில் தேன் பாய்­வது போன்று அமைந்­துள்­ளன. ஆனால் குத்­துப் பாட­லி­லும் அதே­போன்ற தன்­மை­யைக் கொண்­டு­வர வேண்­டும். அது­தான் இசை­ய­மைப்­பா­ள­ராக எனக்­குள்ள சவால்.

"'காந்­தக் கண்­ண­ழகி' போன்ற ஒரு குத்­துப்­பா­டலை எத்­தனை ஆண்­டு­கள் கழித்­துக் கேட்­டா­லும் சலிக்­கா­மல் இருக்­க­வேண்­டும். இதை­யெல்­லாம் மன­தார உணர்ந்து­தான் மெட்­ட­மைக்­கி­றேன்.

"வெறும் மெட்­டைப் பாடிக் கேட்­கும்­போதே இனி­மை­யாக இருக்­க­வேண்­டும். அது முக்­கி­யம். இறை­வன் என்­மீது அன்­பு­டன் இருக்­கி­றார். அந்­தப் பேரன்பை அவர் எனது பாடல்­க­ளின்­மீது தூவிச் செல்­வ­தால் அவை வெற்றி பெறு­வ­தாக நினைப்­பேன். அவ்­வ­ள­வு­தான் முடி­யும். வேறு எது­வும் நம் கையில் இல்லை," என்­கி­றார் இமான்.

'கண்­ணான கண்ணே' போன்ற உற­வுப் பாடல்­க­ளுக்கு நிறைய முன்­னு­தா­ர­ணங்­கள் இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இத்­த­கைய பாடல்­கள் அழி­யாத ரக­மாக பல காலம் நீடிக்­க­வேண்­டும் என விரும்­பு­வா­ராம்.

"இந்­தப் பாட­லைக் கேட்ட உட­னேயே அஜித் சார் சற்றே உணர்ச்சி வசப்­பட்டு, 'நம் படத்­தில் ஒரு நல்ல பாடல் காலா­கா­லத்­துக்­கும் நிலைத்­தி­ருப்­பது போன்று அமைந்­துள்­ளது' என்று குறிப்­பிட்­டார். 'கண்­ணான கண்ணே' பாடல் 'விஸ்­வா­சம்' படத்­துக்குப் பெரிய முக­வ­ரி­யாக மாறும் என்­பது அவ­ருக்கு முன்பே தெரிந்­தி­ருக்­கிறது," என்று சொல்­லும் இமான், தாமும் ஒரு தந்தை என்பதால் அந்­தப் பாட­லுக்­காக மன­மொன்றி மெட்­ட­மைத்­த­தாக கூறு­கி­றார்.

"ஒரு நல்ல பாடல் வெற்­றி­பெற வேண்­டும் எனும் கட்­டா­யம் கிடை­யாது. அதே­போல் வெற்றி பெறும் பாடல் நல்ல பாட­லாக இருக்க வேண்­டும் எனும் அவ­சி­ய­மும் கிடை­யாது. இதை தெளி­வா­கப் புரிந்து கொண்­டுள்­ளேன்," என்கிறார் இமான்.