அம்மாவுக்கு மருந்து வாங்கப் பணமின்றித் தவித்த ஷாருக்கான்

அம்மாவுக்கு மருந்து வாங்கப் பணமின்றித் தவித்த ஷாருக்கான்

2 mins read
f5737e09-0326-4ab4-9eb0-16ef386ee8b9
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஷாருக்கான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தித் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தனது 60வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார்.

மும்பை அருகே உள்ள அலிபாக் கடற்கரைப் பகுதியில் ஷாருக்கானுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு பிறந்தநாளையொட்டி தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

பாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குநர்கள் பராகான், கரண் ஜோகர், நடிகைகள் ராணி முகர்ஜி, அனன்யா பாண்டே, அமிதாப்பச்சனின் பேரன் நவ்யா நந்தா உட்பட ஏராளமானோர் அலிபாக் பண்ணை வீட்டிற்கு முந்தைய நாளே சென்றுவிட்டனர். அது மட்டுமல்ல, தங்களுடைய காரையும் கப்பலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தப் படங்கள் பின்னர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டது.

ஷாருக்கானுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்ட விவேக் வஸ்வானி அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் ஷாருக்கான் குறித்து பல்வேறு தகவல்களை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

“ஷாருக்கான் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பக் காலகட்டத்தில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் உணவகத்துக்கு சாப்பிடச் சென்றிருந்தேன். முதல் 20 நிமிடங்கள் அவர் அமைதியாகச் சாப்பிட்டார்.

“இரண்டு நாள்களாக அவர் எதுவும் சாப்பிடவில்லை என்பது பின்புதான் தெரிந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு, அவர் என்னைப் பார்த்து ‘உனக்குத் தெரியுமா, விவேக்? என் அம்மா இறந்து கொண்டிருக்கிறார்’ என்றார்.

“பின்னர் ஒருமுறை டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மாவுக்கு மருந்துகள் வேண்டும் என்றார். என் தந்தையிடம் கடன் பெற்று பின்னர் நண்பர் மூலம் ஷாருக்கானுக்கு அனுப்பி வைத்தேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் விவேக் வஸ்வானி.

குறிப்புச் சொற்கள்